கூட்டமைப்பினர் பதவி விலக வேண்டும்?

thavarasa1
thavarasa1

தீபாவளிக்கு தீர்வு, சித்திரை வருடத்தில் தீர்வு என்று மக்களை ஏமாற்றி, அரசியல் தீர்வு வராது விட்டால் அரசியலில் இருந்து ஒதுங்குவதாக கூறியிருந்த கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களை பதவி விலக சொல்லுங்கள் அதன் பின்னர் அமைச்சர் டக்ளஸ் பற்றி சிறிதரன் விமர்சிக்கலாம் என வடக்கு மாகாண சபையின் முன்னாள் எதிர்க் கட்சித் தலைவர் சி.தவராசா தெரிவித்தார்.

அவர் இது தொடர்பில் இன்று ஊடகங்களுக்கு தெரிவிக்கையில்,

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணிலை குள்ளநரி என்று மக்கள் முன்னிலையில் கூறிவிட்டு பின்னர் அதே ரணிலின் பின்னால் திரிகின்றார். அவ்வாறானவருக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை விமர்சிக்க தகுதியில்லை.

ரணிலை எத்தனை தடவைகள் எவ்வாறு எல்லாம் விமர்சித்தீர்கள். பின்னர் அதே ரணிலின் பின்னால் திரிகின்றீர்கள் இவ்வாறான சிறிதரன் முதலில் கண்ணாடியை பார்த்துவிட்டு மற்றவர்களை விமர்சிக்க வேண்டும். அமைச்சர் டக்ளஸ் தேவானதா விமர்சித்தவர்களின் பின்னால் ஒரு நாளும் அலைந்ததில்லை.

தமிழ் மக்களை ஏமாற்றி ரணில் பின்னால் வால் பிடித்துக்கொண்டு திரியும் கூட்டமைப்பினரும் முக்கியமாக சிறிதரன் முதலில் உங்களை நீங்களே கேள்வி கேளுங்கள் அதன் பின்னர் மற்றவர்களை விமர்சியுங்கள்.

நாட்டில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் ஈ.பி.டி.பி கட்சி போட்டியிடவில்லை. மாறாக பெரமுனவின் சார்பாக போட்டியிட்ட கோட்டாபய ராஜபக்சவிற்கே ஆதரவு வளங்கியிருந்தது. அவரை வடக்கு கிழக்கு மக்கள் வேறு காரணங்களுக்கு நிராகரித்து இருக்கலாம்.

ஆனால் கடந்த உள்ளுராட்சி தேர்தலில் மூன்று கட்சிகள் இணைந்து போட்டியிட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 154 ஆசனங்களை கைப்பற்றியது. எனினும் தனி ஒரு கட்சியாக ஈ.பி.டி.பி 71 ஆசனங்களை கைப்பற்றியது. மக்கள் தற்போது தெளிவாகி வருகின்றனர்.

முதலில் அரசியல் தீர்வு வராவிட்டால் அரசியலில் இருந்து ஒதுங்குவேன் என அறிக்கை விட்ட கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களை பதவி விலக சொல்லுங்கள் அதன் பின்னர் மற்றவர்களை விமர்சியுங்கள் என்று தெரிவித்துள்ளார்.