வீட்டுத்திட்டத்தில் கழிவு நீர் தேங்கி கிடப்பதால் பொதுமக்கள் விசனம் – பொலிஸார் சம்பவ இடத்திற்கு தீர்வை பெற்றுக் கொடுக்க முயற்சி!

images 3
images 3

கல்முனை மாநகரசபையின் எல்லைக்குட்பட்ட மருதமுனை – பெரியநீலாவணை இஸ்லாமிக் றிலீப் வீட்டுத்திட்டத்தில் கழிவுநீர் கடந்த பல வருடகாலமாக தேங்கிக் கிடப்பதால் இங்கு வசிக்கும் மக்களும் அயலவர்களும் பல்வேறு சுகாதாரப் பிரச்சினைகளை எதிர்நோக்கி வருவதாக இங்கு வசிக்கும் மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

நீண்டகாலமாக இங்கு வசிக்கும் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை கேட்டறிவதற்காக கல்முனை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி கே.எச்.சுஜித் பிரியந்த தலைமையிலான குழு நேற்று (07.06.2020) குறித்த வீட்டுத்திட்டத்திற்கு விஜயம் செய்தனர்.

குறித்த விடயம் தொடர்பில் கல்முனை மாநகர சபை முதல்வர் சட்டத்தரணி ஏ.எம்.றகீப்பை தொலைபேசியில் தொடர்பு கொண்டு உடனடித்தீர்வை பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கை மேற்கொண்ட போது அது கை கொடுக்காததால் பொலிஸாரின் உதவியுடன் குறித்த பகுதிகளும் தற்காலிகமாக சுத்தம் செய்யப்பட்டன.

கல்முனை பிரதான நகரிலிருந்து சுமார் நான்கு கிலோ மீற்றர் தொலைவிலுள்ள அழகிய கிராமமே பெரியநீலாவணை கிராமமாகும். (2004) ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி அனர்தத்தால் முற்றாக பாதிக்கப்பட்டு தமது உறவுகளையும் இருப்பிடங்களையும் இழந்த மருதமுனை மற்றும் பெரியநீலாவணை மக்களுக்காக ‘இஸ்லாமிக் றலீப்’ எனும் அரச சார்பற்ற நிறுவனத்தால் கட்டப்பட்ட தொடர் மாடி வீட்டுத்திட்டம் பெரியநீலாவனை கிராமத்தின் பிரதான வீ.சி வீதியில் காணப்படுகின்றது.

இந்த வீட்டுத்திட்டத்தில் தற்போது சுமார் (108) குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றன. வீட்டுத்திட்டத்தை அண்டிய பகுதியில் பெரியநீலாவணை புலவர்மணி சரிபுத்தீன் மஹா வித்தியாலயம், ஆயள்வேத வைத்தியசாலை, சுகாதார மத்திய நிலையம் எனப் பல அரச நிறுவனங்களும் காணப்படுகின்றன.

வீட்டுத்திட்டத்தில் இருந்து நாளாந்தம் வெளியேறும் மலசலகூட கழிவு, குழியலறைக் கழிவு நீர், சமையலறை கழிவு நீர் என்பன முறையாக வெளியேறுவதற்கான வடிகான் வசதிகள் செய்யப்படாமையால் சுமார் (15) வருடங்களுக்கு மேலாக இங்கு வாழும் மக்கள் பல்வேறு சிரமங்களை எதிர் கொண்டு வருகின்றனர்.

மக்கள் பயன்படுத்தும் நடை பாதைகளில் கழிவுநீர் தேங்கிக்கிடப்பதால் டெங்கு நுளம்புகள் அதிகரித்துள்ளதுடன் துர் நாற்றமும் அதிகரித்துள்ளது. சிறுவர்கள் சறுக்கி விழுந்து விபத்துக்களும் ஏற்பட்டு வருகின்றன என இங்கு வாழும் மக்கள் தெரிவிக்கின்றனர்.

பெரியநீலாவணை இஸ்லாமிக் றிலீப் வீட்டுத்திட்ட கழிவுநீர் பிரச்சினை குறித்து இந்த வீட்டுத்திட்டத்தில் வசிக்கும் மக்கள் பல தடவைகள் கல்முனை மாநகர சபை முதல்வருக்கும் அரசியல் தலைவர்களுக்கும் சுட்டிக் காட்டிய போதும் காலா காலமாக தமது வாக்குகள் அபகரிக்கப்பட்டதே ஒழிய தமது இந்தப் பிரச்சினைக்கு இதுவரை எதுவித பலனும் எட்டவில்லை என இவர்கள் அங்கலாய்க்கின்றனர்.

பாதிக்கப்பட்டுள்ள இந்த மக்களின் பிரச்சினைக்கு விரைவில் தீர்வை பெற்றுக் கொடுத்து பொதுமக்களின் ஆரோக்கிய சுக வாழ்வை உறுதிப்படுத்த சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும் என்பதே அனைவரினதும் எதிர்பார்ப்பாகும்.