வெளிநாடுகளுக்கான விசா அனுமதிப்பத்திரம் பெற்றுத்தருவதாக கூறி பல்வேறு நபர்களிடம் நிதிமோசடியில் ஈடுபட்ட சாவகச்சேரியைச் சேர்ந்தவரை 14 நாள்கள் விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டது.
அம்பாறை மாவட்டம் காரைதீவு பிரதேசத்தைச் சேர்ந்த இருவருக்கு 19 இலட்சத்து 60ஆயிரம் ரூபா மற்றும் 12 இலட்சம் ரூபாய்களை பெற்று நிதி மோசடி மேற்கொண்டார் என்ற குற்றச்சாட்டில் சாவகச்சேரி நுணாவில் கிழக்கைச் சேர்ந்த சதாசிவம் தியாகராஜா சிறப்பு நிதி குற்றப்புலனாய்வு பிரிவினர் கல்முனை நீதிவான் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்திருந்தனர்.
அவரைக் கைது செய்து நீதிமன்றில் முற்படுத்த கல்முனை நீதிவான் பகிரங்க பிடியாணை பிறப்பித்திருந்தார்.
வெளிநாட்டில் உள்ள தனது பிள்ளைகளை பார்வையிடுவதங்காக சந்தேகநபர்
பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு செல்வதாக கிடைக்கப்பெற்ற புலனாய்வு தகவலை அடுத்து அங்கு சென்ற சிறப்பு நிதி குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் அவரைக் கைது செய்தனர்.
சந்தேகநபர் கல்முனை நீதிவான் ஐ.என் றிஸ்வான் முன்னிலையில் இன்று திங்கட்கிழமை(14) முற்படுத்தப்பட்டார்.
இதன் போது சந்தேகநபர் பல்வேறு நபர்களிடம் எந்தவித நிதியை மோசடியும் செய்யவில்லை என கோரி அவரது சட்டத்தரணிகள் நீதிவானிடம் பிணை விண்ணம் கோரி நின்றனர்.
எனினும் சந்தேகநபர் தொடர்பாக கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகள் குறித்து தற்போது விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் இதனால் அவரது பிணை விண்ணப்பத்தை ரத்து செய்யுமாறு பொலிஸார் மன்றுரைத்தனர்.
இருதரப்பு விண்ணப்பங்களையும் ஆராய்ந்த மன்று சந்தேகநபரை எதிர்வரும் 28ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டது.