சம்பந்தனும், சுமந்திரனும் பதவிக்காக எதையும் விட்டுக் கொடுக்கத் தயங்க மாட்டார்கள் – விக்னேஸ்வரன் சாடல்

Cv 720x400 1
Cv 720x400 1

போராடாத எந்த இனமும் விடுதலை பெறப்போவதில்லை என்பது உலகநியதி. உண்மை அப்படி இருக்க, சலுகைகளுக்கும், பதவிகளுக்கும், சரணாகதி அரசியலுக்கும் எமது மக்களை மூளை சலவை செய்ய முயல்கின்றார் சுமந்திரன்.  ஆகவே, தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு வாக்களித்தால் எதிர்கட்சி தலைவர் பதவிக்காக கிண்ணியா வென்னீரூற்றை பறிகொடுக்க முன் வந்தது போல் நாளை அமைச்சுப் பதவிகளுக்காக கோணேஸ்வரத்தையும் நல்லூரையும் பறிகொடுக்கத் தயங்கமாட்டார்கள் இவர்கள்.

இப்படிக் கடுமையாக சாடியுள்ளார் வடக்கின் முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவரும், அக்கட்சியின் சார்பில் யாழ். தேர்தல் மாவட்டத்தில் இலக்கம் 6 இல் போட்டியிடும் சி. வி. விக்னேஸ்வரன்.

நேற்று சனிக்கிழமை யாழ்ப்பாணம் – புத்தூரில் இடம்பெற்ற தேர்தல் பரப்புரையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இதன் போது அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு;

அரசாங்கத்திடம் அமைச்சுப் பதவிகளை பெற்றுக்கொள்ளப் போவதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் சுமந்திரன் அறிவித்துள்ளதாக வெளிவந்துள்ள ஊடக செய்திகள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவர் மிகவும் தெட்டத்தெளிவாக இதனைச் சொல்லியிருக்கின்றார். தாம் அமைச்சுப் பதவிகளைப் பெறுவதற்கு தமிழ் மக்கள் தமக்கு ஆணை தர வேண்டும் என்று துணிந்து வெட்கம் இல்லாமல் கேட்டிருக்கின்றார். எமது தமிழ் மக்களை சுமந்திரன் எந்தளவுக்கு முட்டாள்கள் என்றும், சுய கௌரவம் இல்லாதவர்கள் என்றும் ஏமாளிகள் என்றும் நினைக்கின்றார் என்பதையே இது எடுத்துக் காட்டுகின்றது.

அத்துடன், முன்னையஆட்சியிலும் அமைச்சுப் பதவிகளைப் பெற்றிருந்திருக்க வேண்டும் என்ற கருத்தையும் அவர் கூறி இருக்கின்றார். இது எந்தளவுக்கு சரணாகதி அரசியல் சிந்தனைக்குள்ளும் சலுகை அரசியல் சிந்தனைக்குள்ளும் கடந்தகாலத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு செயற்பட்டிருக்கின்றது என்பதைத் தெட்டத் தெளிவாக எடுத்துக் காட்டுகின்றது. இதனால் எந்தளவுக்கு இனஅழிப்பு மற்றும் போர் குற்றங்களுக்கான சர்வதேச விசாரணை ஒன்று இடம்பெறுவதை தடுத்து நிறுத்தும் வகையிலும் கூட்டமைப்பு செயற்பட்டிருக்கின்றது என்பதையும் எடுத்துக் காட்டுகின்றது.

ஒரு பெரும் துரோகத்துக்கும் காட்டிக்கொடுப்புக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பு தயாராகி வருகின்றது என்பதை சுமந்திரனின் பேச்சு எடுத்துக் காட்டுகின்றது. அவர் அபிவிருத்திக்காக அமைச்சுப் பதவிகளைப் பெறவேண்டும் என்று கூறுவது வெறும் முதலைக்கண்ணீர் வடிப்பதாகும். தமிழ் மக்களின் அபிவிருத்தி மற்றும் பொருளாதாரஅபிவிருத்தியில் உண்மையான அக்கறை இருந்திருந்தால் வட மாகாணசபை ஆட்சியில் இருந்தபோது முதலமைச்சர் நிதியத்தை ஏற்படுத்தி வெளிநாடுகளில் இருந்து நிதியைப் பெறுவதற்கு சம்பந்தனும், சுமந்திரனும் எனக்கு ஒத்துழைப்பு வழங்கி இருப்பர். முதலமைச்சர் நிதியத்தை நாம் பெறஅவர்கள் எந்தவிதத்திலும் உதவிசெய்யவில்லை. மாறாக மறைமுக எதிர்ப்புக்களையே தெரிவித்து வந்தனர்.

சுமந்திரனின் கூற்றில் முரண்பாடு இருக்கிறது. இது எந்தளவுக்குஅவரின் கண்களை அமைச்சு பதவிகள் மறைக்கின்றன என்பதை எடுத்துக் காட்டுகின்றது. அதாவது அரசாங்கத்துடன் இணைந்து அமைச்சுப் பதவிகளை பெற்றமைக்காக ஜி. ஜி பொன்னம்பலம் பின்னர் வருந்தினார் எனத் தெரிவிக்கும் சுமந்திரன், தாங்கள் அமைச்சுப் பதவிகளைப் பெறப்போவதாகக் கூறுகின்றார்.

ஒருபெரும் இனப்படுகொலையை நிகழ்த்திய அரசாங்கத்துக்கு எதிராக நிலத்திலும் புலத்திலும் எமதுமக்கள் அல்லும் பகலும் போராடும்போது தம்மைக் காப்பாற்றும் வகையில் அமைச்சுப் பதவிகளைப் பெற்று அரசாங்கத்துடன் இணைவதற்கு எவ்வாறு சுமந்திரனுக்கு சிந்தனை தோன்றியதோ என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. அரசாங்கத்துடன் இணைந்து அமைச்சுப் பதவிகளைப் பெற்று அமைச்சரவையில் அங்கம் வகித்து எவ்வாறு எமது மக்களுக்கான இன அழிப்புக்கு நீதி பெறுவார்கள் என்பதையும் எவ்வாறு பொறுப்புக்கூறல் பொறிமுறையை ஐ. நா ஊடாக முன்னெடுப்பார் என்பதற்கான அவரின் திட்டத்தையும் எமது மக்கள் முன் சுமந்திரன் அவர்கள் வெளிப்படுத்த வேண்டும். அதாவது இன அழிப்புக்கு இனிமேல் நான் நீதி கேட்கமாட்டேன். – பொறுப்புக்கூறல் பொறிமுறையை நான் ஐ.நா ஊடாக முன்னெடுக்கமாட்டேன் என்று அவர் இனிவெளிப்படையாகக் கூறி எம் மக்களிடம் வாக்குக் கேட்கவேண்டும்.

கடந்த காலங்களில் டக்ளஸ் தேவானந்தா,கருணா,பிள்ளையான் போன்றவர்களும் அரசாங்கத்துடன் இணைந்து அமைச்சர்களாக இருந்தார்கள். ஆனால் அவர்களால் எதைச்சாதிக்கமுடிந்தது? சுமந்திரன் மட்டும் அரசாங்கத்தில் அமைச்சர் ஆகினால் எமது மக்களின் அரசியல் பிரச்சனைகளைத் தீர்க்கப் போகின்றாரா? டக்ளஸ் தேவானந்தா, கருணா, பிள்ளையான் ஆகியோருக்கும் சுமந்திரனுக்கும் இடையில் வித்தியாசம் இல்லை என்று இப்போது ஆகிவிட்டது. இதே டக்ளஸைத்தான் சுமந்திரன் முன்னைய காலங்களில் வெகுவாக விமர்சித்தார். அவரின் கட்சியினர் டக்ளஸை துரோகி என்றார்கள். இப்போது அவரின் கட்சி சுமந்திரன் பற்றி என்ன கூறப்போகின்றது?

போராடாத எந்த இனமும் விடுதலை பெறப்போவதில்லை என்பது உலகநியதி. உண்மைஅப்படி இருக்க, சலுகைகளுக்கும், பதவிகளுக்கும், சரணாகதி அரசியலுக்கும் எமது மக்களை மூளை சலவை செய்ய முயல்கின்றார் சுமந்திரன்.

ஆகவே, தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு வாக்களித்தால் எதிர்கட்சித் தலைவர் பதவிக்காக கிண்ணியா வென்னீரூற்றை பறிகொடுக்க முன் வந்தது போல் நாளை அமைச்சுப் பதவிகளுக்காக கோணேஸ்வரத்தையும் நல்லூரையும் பறிகொடுக்கத் தயங்கமாட்டார்கள் இவர்கள். நீங்கள் தீர்க்கமான முடிவெடுக்கும் காலம் வந்துவிட்டது. உங்களை சுற்றி ஒரு பெரும் சதிவலை பின்னப்பட்டு வருகின்றது. அதை முறியடித்து தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஓர் ஆசனம் கூடப் பெறமுடியாமல் செய்து ஒரு பெரும் வரலாற்றுத் தீர்ப்பினை நீங்கள் அக் கட்சிக்கு அளித்து அதர்மத்துக்கு சாவுமணி அடிக்கும் காலம் வந்துவிட்டது. தம்பி பிரபாகரன் ஒன்றிணைத்த ஐந்து கட்சித் தமிழ் தேசியக் கூட்டமைப்பு இப்போது குற்றுயிராகக் கிடக்கின்றது என்பதை எல்லோரும் ஏற்கின்றார்கள்.

வெறும் அரசியல் போட்டி காரணமாக நான் இந்தக்கருத்துக்களை வெளிக் கொண்டுவரவில்லை. வரலாற்றைப் பாருங்கள். அந்த அனுபவத்தில் இருந்து உண்மையை உணர்ந்து கொள்ளுங்கள். திட்டமிட்டு எமது மக்களை இனஅழிப்புசெய்த ஒருஅரசாங்கத்திடம் இருந்து இந்தநாட்டில் இனப்பிரச்சினை என்ற ஒன்றே இல்லை என்று திட்டவட்டமாக கூறியுள்ளஅரசாங்கத்திடம் இருந்து தமிழ் தேசிய கூட்டமைப்பு அமைச்சுக்களைப் பெறுவதால் எமக்கான அதிகாரத்தையோ, நீதியையோ அல்லது அபிவிருத்தியையோ அரசுதரும் என்று எதிர்பார்க்க முடியுமா?
எதிர்க்கட்சித்தலைவர் பதவியை பெறுவதற்கும் இதே மாதிரியான கதைகளைத்தான் சொன்னார்கள். ஆனால்,எதிர்க்கட்சித்தலைவர் பதவிக்காலத்தில் வாய் தவறி கூட எமதுமக்களுக்கு ‘இன அழிப்பு’ நடந்தது என்று எங்கேயாவது கூறினார்களா? மாறாக, ஐ. நா. மனித உரிமைகள் சபையில் அரசாங்கத்தைப் பாதுகாப்பதற்கு மட்டுந்தான் அதனைப் பயன்படுத்தினார்கள். ஏற்கனவே நாம் எமது காணிகளை இழந்துவிட்டோம். மேலும் காணிகள் பறிபோகின்றன. தமிழ்க் கைதிகள் தொடர்ந்து சிறையில் உள்ளார்கள்.

இராணுவத்தொகை இன்று வடக்கிலும் கிழக்கிலும் பெருகி வருகின்றது. பௌத்தமயமாக்கலும் சிங்களமயமாக்கலும் சிங்களக் குடியேற்றங்களும் துரிதமாக நடந்துகொண்டிருக்கின்றன. இவர்கள் அமைச்சர்களாக வந்தால் தமது அமைச்சுக்களைக் காப்பாற்ற மௌன மடந்தைகளாக இருப்பார்கள். விரைவில் வடகிழக்கின் தமிழ் மக்கள் தொகை கூனிக் குறுகிவிடும்.

ஆகவே இன்று என் மக்கள் முன் இந்த விடயத்தைஅவசரமாகக் கூற வேண்டியிருந்ததால் இந்த விபரங்களை நான் உடனுக்குடனேயே பகிர்ந்துகொள்கின்றேன். நீங்கள் யாவரும் வரும் ஓகஸ்ட் 5ந் திகதி காலையிலேயே வாக்குச் சாவடிக்குச் சென்று மீன் சின்னத்திற்கு உங்கள் புள்ளடிகளைப் போடுவீர்கள் என்று நம்பிக்கை கொள்கிறேன் – என்றார்.