மட்டக்களப்பு மாவட்டத்தின் கிரான் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள ஊத்துச்சேனை பிரதேசத்தில் குளத்தில் குளிக்கச் சென்ற சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.
வாழைச்சேனை கருணைபுரத்தினைச் சேர்ந்த சி.ஜக்ஷன் (வயது 14) என்ற சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிசார் தெரிவித்தனர்.
நேற்று (ஞாயிற்றுகிழமை) காலை வழமை போன்று தமது கிராமத்தில் உள்ள ஊத்துச்சேனை அரக்கல் குளத்தில் குளித்துக் கொண்டிருந்த போது ஆழமான சேற்றுப் பிரதேசத்தில் கால் புதைந்து உயிரிழந்துள்ளதாக உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.
குறித்த சிறுவன் தமது பாட்டியுடன் வசித்து வந்ததாகவும் உறவினர்கள் தெரிவித்தனர்.
தற்போது சடலம் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளதுடன், குறித்த சம்பவம் தொடர்பாக பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
குறித்த பிரதேசத்தில் வரட்சியான காலநிலை நிலவுவதால் பிரதேச மக்கள் அனேகமானோர் நீர் உள்ள குளங்களில் குளிப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.