நீராவியடிப் பிள்ளையார் கோவிலின் வருடாந்த பொங்கல் விழா ஏற்பாடுகளின் போது பொலிஸார் இடையூறு

IMG 8070
IMG 8070

சர்ச்சைக்குரிய பழைய செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலய வருடாந்த பொங்கல் உற்சவம் நாளை இடம்பெறவுள்ள நிலையில் பொலிஸாரால் இடையூறுகள் ஏற்படுத்தபட்டுள்ளது .

இந் நிலையில் கோவில் நிர்வாகத்தினர் மற்றும், ஊர் மக்கள் இணைந்து, குறித்த பொங்கல் விழாவிற்கான ஏற்பாடுகளில் (23.07 ) இன்றைய நாள் ஈடுபட்டிருந்தனர்.

IMG 8072
IMG 8072

குறிப்பாக நாளைய நாள் (வியாழக்கிழமை) இடம்பெறவுள்ள பொங்கல் நிகழ்வுக்காக கோவில் நிர்வாகத்தினர், கோவில் சூழலில் தகரப் பந்தல் அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது குறித்த இடத்திற்கு அதிகளவான ஆயுதம் தாங்கிய விசேட அதிரடிப்படையினர், மற்றும் காவல்துறையினர் வருகை தந்திருந்தனர்.

அத்தோடு அங்கு வருகை தந்த காவல்துறையினர், கோவில் சூழலில் தகரப் பந்தல் அமைக்கக்கூடாதெனத் தடைவிதித்திருந்தனர்.
இந் நிலையில் நீராவியடி பிள்ளையார் ஆலய  நிர்வாகத்தினரால்  கோவிலில் இடம்பெறவுள்ள வருடாந்த பொங்கல் விழா தொடர்பில் காவல்துறையினருக்கு நிலைமைகளைத் தெளிவுபடுத்தப்பட்டது.

இருப்பினும் காவல்துறையினர் கோவில் சூழலில் தகரப் பந்தல் அமைக்கக் கூடாதெனத் தொடர்ந்தும் கோவில் நிர்வாகத்தினரைத் தடுத்தனர்.இந் நிலையில் காவல்துறையினரின் இடையூறுகளுக்கு மத்தியிலும் கோவில் நிர்வாகதினர் பந்தல் அமைக்கும் செயற்பாட்டில் ஈடுபட்டிருந்தனர்.

தொடர்ந்தும் காவல்துறையினர் பந்தல் அமைப்பதற்கு தடை விதித்த நிலையில் , முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ரவிகரன்  மற்றும் கோவில் நிர்வாகத்தினர் ஆகியோர், தகரப்பந்தலை கோவில் சூழலில் அமைக்கக்கூடாதென்றால், அவ் அறிவித்தலை எழுத்துமூலம் தருமாறு காவல்துறையினரிடம் கோரியிருந்தனர்.
அதனையடுத்து காவல்துறையினர் கோவில் வளாகத்தில் பந்தலை அமைக்குமாறு கூறி அங்கிருந்து விலகிச் சென்றிருந்தனர்.

குறித்த நீராவியடிப் பிள்ளையார் கோவில்ச் சூழலில் குடியிருக்கின்ற பௌத்த பிக்குவின் தூண்டுதலிலேதான் காவல்துறையினர் தம்மை கோவில் சூழலில் பந்தல் அமைக்கக்கூடாதெனத் தடுத்ததாகவும், காவல்துறையினர் பக்கச்சார்பாக நடந்துகொண்டதாகவும் கோவில் நிர்வாகத்தினர் குற்றச்சாட்டுக்களையும் முன்வைத்தனர்.

அதேவேளை நீதிமன்றத் தீர்ப்பிற்கு முரணாக தாம் நடந்துகொள்ளவில்லை எனவும், நாளை இடம்பெறவிருக்கின்ற பொங்கல் நிகழ்விற்காகத் தற்காலிகமாகவே தாம் தகரப்பந்தல் அமைத்ததாகவும் கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.
ஆனால் கோவில் சூழலில் குடியிருக்கின்ற பௌத்த பிக்கு, நீதிமன்றத் தீர்ப்பினை கோவில் சூழலில் நீர்த்தாங்கி ஒன்றினை நிர்மானித்துள்ளதுடன், அங்கு பௌத்தக் கொடிகளைப் பறக்கவிட்டுள்ளதாகவும், ஆகவே நீதிமன்றத் தீர்ப்பை மீறி பௌத்த பிக்கு செய்யும் செயற்பாடுகளுக்காக தாம் விரைவில் நீதிமன்றத்தினை நாடவுள்ளதாகவும் கோவில் நிர்வாகத்தினர் மேலும் தெரிவித்தனர்.