இளைஞனைக் கடத்திச் சென்று தாக்குதல் நடத்திய மர்ம கும்பல்

beaten2323 15610872811 1561867009
beaten2323 15610872811 1561867009

முகத்தில் பசளைப் பையைக் கொண்டு மறைத்து முச்சக்கர வண்டியில் இளைஞனைக் கடத்திச் சென்று தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பற்றி ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டுள்ளது.

தாக்குதலில் படுகாயமடைந்த இளைஞன் மீட்கப்பட்ட நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் நேற்று சனிக்கிழமை நண்பகல் 25.07.2020 சேர்ப்பித்துள்ளதாக உறவினர்கள் தெரிவித்தனர்.

சம்பவத்தில் ஏறாவூர் மீராகேணி ஸம்ஸம் கிராமத்தில் வசிக்கும் முஹம்மது சலீம் முஹம்மது அஸீம் (வயது 24) என்ற இளைஞனே தாக்குதலுக்குள்ளாகி படுகாயமடைள்ளார்.

ஏறாவூர் பொலிஸ் பிரிவு மீராகேணியில் இடம்பெற்றுள்ள இச்சம்பவம் பற்றி தாக்கப்பட்ட இளைஞனின் தந்தை வெள்ளத்தம்பி முஹம்மது சலீம் (வயது 51) விவரிக்கையில், 

வெள்ளிக்கிழமை இரவு 9 மணியளவில் மோட்டார் சைக்கிளில் சென்ற எனது மகன் காணாமல் போனார்.

பின்னர் இச்சம்பவம் பற்றி 25.07.2020   சனிக்கிழமை அதிகாலை 2 மணிக்கு ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் CIB 4 – 307/304 இலக்கத்தில் முறைப்பாடு தெரிவித்தேன்.

சம்பவ தினம் இரவு 9 மணியளவில் காணாமல் போன எனது மகன் படுகாயங்களுடன் சனிக்கிழமை அதிகாலை மீட்கப்பட்டார்.

மீட்கப்பட்டவர் பொலிஸில் தெரிவித்த வாக்குமூலத்தில் தான் மீராகேணி ஆர்.டி.எஸ் வீதியூடாக வெள்ளிக்கிழமை இரவு 9 மணியளவில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது இனந்தெரியாத நபர்கள் முச்சக்கரவண்டியொன்றில் வந்து உடனடியாக தனது முகத்தில் பசளைப் பையைப் போட்டு மறைத்து தன்னை மறைவான ஒரு இடத்திற்கு முச்சக்கர வண்டியில் கடத்திச் சென்று தாக்கியதாகவும் தெரிவித்துள்ளார்.

கடத்தியவர்களை தன்னால் அடையாளம் காணமுடியாதுள்ள போதிலும் தன்னைத் தாக்கிய அரசியல் கட்சியொன்றைச் சேர்ந்தவர்களின் பெயர் விவரம் தனக்கு நன்கு தெரியும் என்றும் வாக்குமூலமளித்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து வெளியில் தெரியப்படுத்தினால் உனது குடும்பமே அழிக்கப்படும் என்று தன்னைத் தாக்கியவர்கள்   எச்சரித்ததாகவும் அஸீம் தனது வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.

இச்சம்பவத்தில் ஈடுபட்ட அரசியல் கட்சியொன்றின் செயற்பாட்டாளர்கள் பற்றிய விவரங்களைப் பொலிஸ் வாக்குமூலத்தில் தெரிவித்திருந்த போதிலும் பொலிஸார் இன்னமும் எவரையும் கைது செய்யவில்லை என்பதால் தான் மாவட்ட பொலிஸ் அத்தியட்சகரின் கவனத்திற்கு இவ் விடயத்தைக் கொண்டு செல்லவுள்ளதாகவும் தாக்கப்பட்ட இளைஞனின் தந்தை குறிப்பிட்டார்.