கோட்டாபயவின் ஏவலாளிகளான அங்கஜன், டக்ளஸை தோற்கடியுங்கள்; தமிழ் மக்களிடம் அறைகூவல்

download 2 8
download 2 8

கோட்டாபய ராஜபக்சவை நாம் கடந்த ஜனாதிபதித் தேர்தலில் ஒரு தடவை விரட்டி அடித்துவிட்டோம். ஆனாலும், அவரின் கைக்கூலிகளாக, ஏவலாளிகளாக இங்கு வலம் வருபவர்களை இந்தத் தேர்தலுடன் அடித்து விரட்ட வேண்டும். எங்கள் சொந்தங்களை குருதி சிந்த வைத்த கோட்டாவை மறுபடியும் தோற்கடிக்க ஒரு வாய்ப்பு ஆகஸ்ட் 5ஆம் திகதி உங்களைத் தேடி வருகின்றது. கோட்டாவின் அடியாள்களான டக்ளஸ், அங்கஜனை தோற்கடிப்பதன் ஊடாக அதனை நீங்கள் செய்யவேண்டும்.”

– இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்ப்பாணம் – கிளிநொச்சி தேர்தல் மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், அந்தக் கட்சியின் வேட்பாளருமான ஈ.சரவணபவன் தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் இன்று நடைபெற்ற தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“கடந்த ஜனாதிபதித் தேர்தலின்போது தமிழ் மக்கள் ஓரணியாக, ஒரு நிலைப்பட்டு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கை காட்டிய வழியில் வாக்களித்தார்கள்.

தமிழினப் படுகொலையின் சூத்திரதாரி, இறுதிப் போரின் கொலையாளி யார் என்று தமிழ் மக்கள் கருதினார்களோ அவரை, தங்கள் வாக்கு என்ற ஆயுதத்தால் வெட்டி வீழ்த்தினார்கள். தமிழ் மக்கள் ஒற்றுமையாக வாக்களித்தமையால்தான் அது சாத்தியமாயிற்று.

கோட்டாபய ராஜபக்ச யாழ்ப்பாணம் – கிளிநொச்சி தேர்தல் மாவட்டத்தில் வெறும் 23 ஆயிரத்து 261 வாக்குகளை மாத்திரம் பெற்றார். ஆனால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வழிகாட்டலில் தமிழ் மக்கள் வாக்களித்தமையால் சஜித் பிரேமதாஸ 3 இலட்சத்து 12 ஆயிரத்து 722 வாக்குகளைப் பெற்றார். இந்த மாபெரும் வெற்றி எப்படிச் சாத்தியமானது? தமிழ் மக்கள், தாங்கள் வேரறுத்து வீழ்த்த வேண்டியவரை ஓர்மத்துடன் வெட்டிச் சாய்த்தனர்.  

ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் கோட்டாபய, தான் சிங்கள மக்களின் வாக்குகளால் மாத்திரம் வெல்வேன் என்றும், தனக்கு முழு இலங்கையிலும் வாக்குகள் கிடைக்கப் பெற்றன என்பதை சர்வதேச சமூகத்துக்குக்கு காட்டுவதற்கு தமிழ் மக்களின் ஓரளவு வாக்குகள் கிடைத்தால் போதுமானது என்றும் பகிரங்கமாகச் சொல்லியிருந்தார். ஆனால், ஜனாதிபதித் தேர்தலில் இலங்கை முழுவதும் உள்ள தமிழ் மக்கள் ஓரணியாக நின்று கோட்டாவுக்கு எதிராக வாக்களித்தனர். கோட்டாபய தமிழ் மக்களிடம் அடிவாங்கி மண் கவ்வினார்.

கோட்டாவுக்கு கொடுத்த அடி

கோட்டாபயவுக்கு தமிழ் மக்கள் கொடுத்த அடி பலமானது. அந்த அடியைத் தொடர்ந்தும் தக்க வைக்க வேண்டும். ஆனால், இப்போது அதைத் தக்கவைக்கும் வகையில் தமிழ் மக்களின் செயற்பாடுகள் இல்லை என்பதுதான் வேதனைக்குரியது.

நடக்கப் போகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் கோட்டாபய யாழ்ப்பாணம் – கிளிநொச்சி தேர்தல் மாவட்டத்திலும் களமிறங்கியிருக்கின்றார். அதை நாங்கள் உணர்ந்து கொள்ளாமல் இருக்கின்றோம்.
இன்று இங்கு போட்டியிடும் அங்கஜன், டக்ளஸ் போன்றவர்கள் யார்? அவர்கள் எந்தக் கட்சியில் இங்கு போட்டியிடுகின்றனர்? அவர்கள் வெற்றி பெற்றால் யாருடன் இணைந்து கொள்வார்கள்? இந்தக் கேள்விகளுக்கு விடை தேடியிருக்கின்றீர்களா?

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சார்பில் அங்கஜன் இங்கு போட்டியிடுகின்றார். அவரது கட்சித் தலைவரும், அவரது கட்சியும் யாழ்ப்பாணத்துக்கு வெளியே எந்தக் கட்சியில் யாருடைய தலைமையில் இணைந்து போட்டியிடுகின்றன? ராஜபக்சக்களின் குடும்பக் கட்சியான ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியுடன் இரண்டறக் கலந்துதான் அவர்கள் போட்டியிடுகின்றார்கள். யாழ்ப்பாணத்தில் மாத்திரம் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி என்ற பெயருடன் ஏன் போட்டியிடுகின்றார்கள் என்று சிந்தித்துப் பார்த்தீர்களா?

மக்களே ஏமாந்துவிடாதீர்கள்

கோட்டாபயவின் முகத்துடன் களமிறங்கினால் ஜனாதிபதித் தேர்தலில் வாங்கிய அடியைவிட மோசமாக வாங்க வேண்டி வரும் என்று தெரிந்துதான், கோட்டாபய, அங்கஜன் என்ற முகம் ஊடாக யாழ்ப்பாணத்தில் களமிறங்கியுள்ளார். மக்களே நீங்கள் விழிப்பாக இல்லாவிட்டால், கோட்டாபயவுக்கு வாக்களித்து அங்கீகாரம் கொடுப்பது போலாகிவிடும்.

அங்கஜன் யாழ்ப்பாணத்தில் வெற்றி பெற்றால் அது அவரின் வெற்றியாக அமையாது. கோட்டாபயவின் கொள்கைகளையும் தமிழ் மக்கள் ஏற்று அங்கீகரிப்பது போன்றுதான் அமையும். அதற்கு நீங்கள் இடமளிக்கப் போகின்றீர்களா? கலர் கலராக பிரசுரங்களை அடித்து விட்டு, கவர்ச்சியாகப் படங்களைப் போட்டு விஞ்ஞாபனம் அடித்து விட்டு உங்கள் வாக்குகளை சூறையாடி கோட்டாவுக்கு அங்கீகாரம் பெற்றுக்கொடுக்கும் அங்கஜனுக்காக நீங்கள் வாக்களிக்கப் போகின்றீர்களா? 8 மாதங்களுக்கு முன்னர் நீங்கள் அடித்து விரட்டிய கோட்டாபயவுக்கு, இப்போது வாக்கிடப் போகின்றீர்களா?

டக்ளஸ் செய்தவற்றை
மறந்துவிட்டீர்களா?

அமைச்சராக வலம் வரும் டக்ளஸ் தேவானந்தா கடந்த காலங்களில் என்ன செய்தார் என்பதை மறந்து விட்டீர்களா? 2006ஆம் ஆண்டு தொடக்கம் 2010 ஆம் ஆண்டு வரை பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக இருந்த கோட்டாபயவுடன் இணைந்து அவர் இங்கு என்ன செய்தார் என்பதை மறந்து விட்டீர்களா?

வீதிக்கு வீதி சுட்டுக் கொல்லப்பட்டவர்கள் உங்களது பிள்ளைகள் இல்லையா? ஊரடங்கு நேரத்தில் இரவில் வெள்ளை வானில் கடத்திச் செல்லப்பட்டவர்கள் உங்கள் இரத்தமில்லையா? இராணுவத் துணைக்குழுவாக இயங்கி காட்டிக் கொடுத்தவர்களை மறந்து விட்டீர்களா?

டக்ளஸ் தேவானந்தா யாருடைய அமைச்சரவையில் அமைச்சராக இருக்கின்றார்? அவரின் எஜமானார் யார்? இந்த இரண்டு கேள்விகளுக்கும் விடை கோட்டாபயவே.

கோட்டாபயவின் ஒரு முகம் அங்கஜன் என்றால் மறுமுகம் டக்ளஸ். டக்ளஸ் வெற்றி பெற்றால் யாருடன் கூட்டுச் சேருவார்? நீங்கள் இரண்டரை இலட்சம் வாக்குகளால் தோற்கடித்த கோட்டாவுடன்தான் அவர் கூட்டுச் சேர்வார்.

கோட்டாபயவை நாம் ஒரு தடவை விரட்டி அடித்துவிட்டோம். ஆனாலும், அவரின் கைக்கூலிகளாக, ஏவலாளிகளாக இங்கு வலம் வருபவர்களையும் இந்தப் பொதுத்தேர்தலுடன் அடித்து விரட்ட வேண்டும். எங்கள் சொந்தங்களை குருதி சிந்த வைத்த கோத்தாவை மறுபடியும் தோற்கடிக்க ஒரு வாய்ப்பு ஆகஸ்ட் 5ஆம் திகதி உங்களைத் தேடி வருகின்றது. கோட்டாவின் அடியாள்களான டக்ளஸ், அங்கஜனை தோற்கடிப்பதன் ஊடாக அதனை நீங்கள் செய்யவேண்டும்” – என்றார்.