கொள்கையுடன் நிற்கின்ற கட்சிகளை இம்முறை கவனத்தில் கொள்ள வேண்டும்

DSC 0619
DSC 0619

மக்கள் பேரினவாதக் கட்சிகள், பேரினவாத கட்சிகளுக்கு சார்பான கட்சிகள் சம்பந்தமாக எந்தக் கருத்திலும் கொள்ளாது மாற்று கட்சிகள் அதாவது தமிழ் தேசிய கொள்கையோடு நிற்கின்ற தமிழ் தேசிய பிரச்சினையை கையாளுகின்ற கொள்கையுடன் நிற்கின்ற கட்சிகளை கவனத்தில் கொள்ள வேண்டும் என தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் வன்னி மாவட்ட வேட்பாளரும்,முன்னாள் வடமாகாண அமைச்சருமான  ஜீ.குணசீலன் தெரிவித்தார்.

மன்னாரில் இன்று செவ்வாய்க்கிழமை மதியம் இடம் பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் அவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,,,, 
எதிர் வரும் வாரம்  பாராளுமன்ற பொதுத்தேர்தல் இடம் பெற உள்ள நிலையில் எமது மக்கள்   பல வேட்பாளர்களையும் பல கட்சிகளையும் முகம் கொடுத்து ஒரு குழப்ப நிலையிலேயே  காணப்படுகின்றார்கள்.

முக்கியமாக கூறப்போனால் தேசியக் கட்சிகள் அதாவது பேரினவாத கட்சிகள் ஆண்டாண்டு காலமாக எமது மக்களுக்கு தேர்தல் காலங்களில் சில வாக்குறுதிகளை அளிப்பது அதாவது வேலைவாய்ப்பு சம்பந்தமாக பொருளாதார அபிவிருத்தி தொடர்பாக வாழ்வாதாரம் தொடர்பாகவும் பல்வேறு வாக்குறுதிகளை வழங்குவதும் அதன் மூலம் மக்களுடைய வாக்குகளை சிதறடித்து தேர்தலில் வெற்றி பெற்று பின்பு   மக்களுடைய வாழ்க்கை மீண்டும் அதே நிலைமைக்கு திரும்புவதையும் அவதானிக்க கூடியதாக இருக்கிறது.

இந்த முறை பல காட்சிகள் தேர்தலில் களம் இறங்கியுள்ளது. அரசு தரப்பில் மொட்டு சின்னத்தில் இறங்கியுள்ளது. மேலும் யானை , தொலைபேசி சின்னங்களில் போட்டியிடுகின்றனர்.
மேலும்   பேரினவாத கட்சிகளுக்கு ஆதரவாக   தமிழ் கட்சிகள்   அவர்களுடன்  இணைந்து   தமிழ் மக்களுடைய வாக்குகளை சிதறடித்து அதற்காக தன்னுடைய அரசியல் பலத்தை குறைப்பதாக முயற்சிகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.

குறிப்பாக வீணை,மெழுகுதிரி சின்னத்திலான கட்சியினர் மற்றும் ஏராளமான சுயேட்சைக் குழுக்கள் களமிறக்கப்பட்டுள்ளனர்.ஆகவே தமிழ் மக்களுடைய வாக்குகளை இவ்வாறு சிதறடிக்கும் பொழுது   மக்களினுடைய பிரதி நிதித்துவம் பாராளுமன்ற பிரதிநிதித்துவம் குறைவடையக் கூடிய வாய்ப்பை ஏற்படுத்தி அதன் மூலமாக எமது தேசிய இனப் பிரச்சினைக்குரிய தீர்வுக்கான பேரம் பேசும் தன்மையை குறைப்பதற்காகவே இந்த காட்சிகள் களமிறக்கப்பட்டுள்ளன.

நாங்கள் ஆண்டாண்டு காலமாக எங்களுடைய அனுபவத்தின் மூலம் நாங்கள் பேரினவாத கட்சிகளினூடாக நாங்கள் சாதித்தது என்ன? என்பதை நாம் கண்டிருக்கின்றோம்.
எந்த ஒரு பேரினவாத கட்சியும் எங்கள் மக்களுடைய பிரச்சினையை ஏற்றுக் கொண்டதாகவே இன்னும் சரித்திரத்தில் இல்லை. தமிழ் மக்களுக்கு ஒரு தேசியப் பிரச்சனை ஒன்று உள்ளது என்பதை ஏற்றுக்கொள்ளக் கூட எந்த கட்சியும் தயாராக இல்லை.ஆகவே அந்த அடிப்படை பிரச்சினையை கூட ஏற்றுக் கொள்ளாத கட்சி சம்பந்தமாக   மக்கள் சிந்திக்க வேண்டிய அவசியமே இல்லை.

இம்முறை தேசிய கட்சியில் அல்லது தேசிய கட்சிகளுக்கு பின்னால் வால் பிடிக்கின்ற தமிழ் கட்சிகள் அல்லது ஏனைய சுயேட்சைக் குழுக்கள் தொடர்பாக மக்கள் மிகக் கவனமாக இருக்க வேண்டும்.
இந்த தேர்தலிலே அவர்கள் அந்த கட்சிகளை புறக்கணிக்க வேண்டும்.தேசிய கொள்கையுடன் அடிப்படை பிரச்சினைகளை மனதில் கொண்டு அதனை தீர்க்க  வேண்டும் என்பதற்காக முன் நிற்கின்ற காட்சிகள் தொடர்பாக மக்கள் இந்த முறை தீர்மானம் எடுக்க வேண்டும்.

எனவே இந்த முறை   பல்வேறுபட்ட வாக்குறுதிகளை தேசிய கட்சிகளினால்  வழங்கப்படலாம்.ஆனால் ஒரு விடயத்தை மட்டும் பல ஆண்டுகளாக நாங்கள் கவனித்து பார்ப்போமாக இருந்தால் தேசிய கட்சிகள் எந்த அளவுக்கு எங்களுடைய மக்களுடைய பிரச்சினையை தீர்த்து வைத்துள்ளது என்பது உங்களுக்கு தெரியும்.ஆகவே இத் தேர்தல் என்பது மிக முக்கியமானது.

ஒரு நேரத்தில் மஹிந்த ராஜபக்ஸவின் அரசாங்கமாக இருந்தால் என்ன ரணில் விக்கிரமசிங்கவின் அரசாங்கமாக இருந்தால் என்ன தொடர்ச்சியாக எமது  மக்கள் ஏமாற்றப் பட்டு வந்திருப்பதை பார்த்திருக்கின்றோம்.
ஒரு வகையில் எங்களுடைய ஆயுதப் போராட்டத்தினுடைய   வலிமையை குறைத்து விடுதலைப்புலிகளுக்கு இடையில்  பிளவுகளை உருவாக்கி அங்கே துரோகத்தனங்களை மேற்கொண்டு எமது மக்களுடைய விடுதலைப் போராட்டத்தின் பலத்தை குறைத்து இந் நிலைக்கு தள்ளிய முதலாவது குற்றவாளியாக ரணில் விக்கிரமசிங்கவை பார்க்கலாம்.

அதற்கு அடுத்ததாக எங்களுடைய போராட்டத்தினுடைய முடிவையே உருவாக்கி இனப்படுகொலை ஒன்றை பெருமளவில் நிகழ்த்தி பேரழிவை உருவாக்கியது கோத்தபாய ராஜபக்ச அவருடைய அரசாங்கத்தையே சேரும்.
எந்த விதத்திலும் எங்களுக்கு துரோகம் இழைத்த பட்டியலுக்குள் இவ்வாறான அரசாங்கங்களுக்கு முட்டுக்கொடுத்த எங்களுடைய கூட்டமைப்பு கூடவே சேர்ந்து கொண்டிருக்கிறது.

ஆகவே இம்முறை மக்கள் பேரினவாதக் கட்சிகள் பேரினவாத கட்சிகளுக்கு சார்பான கட்சிகள் சம்பந்தமாக எந்தக் கருத்தில் கொள்ளாது மாற்று கட்சிகள் அதாவது தமிழ்தேசிய கொள்கையோடு நிற்கின்ற தமிழ் தேசிய பிரச்சினையை கையாளுகின்ற கொள்கையுடன் நிற்கின்ற கட்சிகளை கவனத்தில் கொள்ள வேண்டும்.
பலர் வந்து தங்களுக்கு சந்தர்ப்பம் வழங்குமாறு கேட்பார்கள்.அதிலும் குறிப்பாக சிலர் இன்னும் ஒரு சந்தர்ப்பம் தாருங்கள் இன்னும் ஒரு சந்தர்ப்பம் தாருங்கள் என்று சொல்லி மீண்டும் மீண்டும் சந்தர்ப்பம் கேட்பார்கள்.

நாங்கள் இம்முறை கேட்கின்றோம் இன்னுமொரு சந்தர்ப்பம் இன்னுமொரு சந்தர்ப்பம் என்று மீண்டும் மீண்டும் மக்கள்   குறிப்பிட்ட வினைத்திறன் இல்லாத அடிப்படைக் கொள்கைகளை தவறவிட்ட கட்சிக்கு வாக்களிப்பதை விட ஒரு சந்தர்ப்பம் தாருங்கள் நாங்கள் சிலவற்றை சாதித்து காட்டுவதற்கு  அந்த சந்தர்ப்பத்தை தந்து எங்களுக்கு ஒரு   முயற்சியை மேற்கொள்ளுவதற்கான அத்திவாரத்தை இட்டுத் தாருங்கள் என்று நாங்கள் கேட்டிருக்கின்றோம்.

ஏற்கனவே கூறப்பட்டுள்ளது.கட்சி,சின்னம் என்பன குழப்பம் அடையும் விடையமாக கருதப்படுகின்றது.அப்படியல்ல ஒரு கட்சியினுடைய சின்னமும் அதனுடைய கொள்கைகள் அதனுடைய பெயர் போன்ற பல்வேறு விடயங்கள் மக்களுடைய பார்வையிலேயே மனதில் உட்பதிவதற்கான வாய்ப்புக்கள்    மிக அதிகமாக இருக்கிறது.
ஒரு விதத்திலே புதுப்புது சின்னங்களை தெரிவு செய்கின்ற பொழுது கூட அரசாங்க கட்சிகள் தொடர்ச்சியாக வெற்றியடைந்ததை நாங்கள் பார்த்திருக்கின்றோம்.

எனவே ‘மீன் சின்னம்’ என்பது ஒரு புது சின்னமல்ல அதன் கட்சியினுடைய பெயர் புதியது இல்லை.எங்களுடைய கொள்கைகள் சரியாகவே இருக்கின்றன. தேசிய பிரச்சினைக்கு விட்டுக் கொடுக்காமல் பேரம் பேசி எந்த அரசாங்கத்துக்கு பின்னாலும் எந்த துரோகமும் இழைக்காமல் தேசிய பிரச்சினைக்கு  தீர்வுகாண வேண்டும் என்கின்ற முதலாவது அடிப்படை கொள்கையோடு சம காலத்தில் மக்களுக்குரிய அபிவிருத்தியையும் கொண்டு செல்ல வேண்டும் என்று நாங்கள் முடிவு எடுத்திருக்கிறோம்.

ஆகவே மீண்டும் மீண்டும் தவறிழைத்தவர்களை நீங்கள் மீண்டும் மீண்டும் தெரிவு செய்கின்ற அந்த தவறை நிறுத்தி எங்களுக்கு இம்முறை ஒரு சந்தர்ப்பத்தை வழங்கி தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி தன்னுடைய அணுகு முறையின் மூலம்   மக்களுடைய பிரச்சினைகளை விட்டுக் கொடுக்காமல் விலை போகாமல் அபிவிருத்தியுடன் கொண்டு செல்ல வாய்ப்பு வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.என அவர் மேலும் தெரிவித்தார்