ஜனாதிபதியும் பிரதமரும் தேர்தல் ஆணைக்குழுக்களின் அதிகாரங்களை கட்டுப்படுத்த முயல்கின்றனர் என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
தேர்தல் பிரசார கூட்டமொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
குறித்த தேர்தல் பிரசார கூட்டத்தில் அநுர குமார திசாநாயக்க மேலும் கூறியுள்ளதாவது, “அரசாங்கம், அரசியலமைப்பில் மாற்றங்களை மேற்கொள்வதற்காகவே மூன்றில் இரண்டு பெரும்பான்மை வேண்டுமென எதிர்பார்க்கின்றது.
மேலும் அரசியலமைப்பின் 19ஆவது திருத்தம், ராஜபக்ஷ சகோதரர்களுக்கு அதிகாரங்களை வழங்காத சில விடயங்கள் காணப்படுகின்றன.
முன்னர் ஜனாதிபதிகளால் நீதிபதிகளை நியமிக்க முடிந்தது. ஆனால் 10 ஆவது திருத்தம் அந்த அதிகாரத்தை இல்லாமல் செய்துள்ளது. எனவே அதனை மாற்றியமைக்கவே தற்போதைய அரசாங்கம் விரும்புகின்றது.
அத்துடன் அதிகாரங்கள் சுயாதீன ஆணைக்குழுவிடம் உள்ளமையினால் ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் அது தடையாகவுள்ளது.
மேலும் தேர்தல் ஆணைக்குழுக்களின் அதிகாரங்களை கட்டுப்படுத்தவே ஜனாதிபதியும் பிரதமரும் தற்போது முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.