இரணைமடு குளத்தின் தண்ணீரை யாழ்ப்பாணத்திற்கு வழங்க முடியாதென தான் கூறியதாக ஊடங்களில் வெளிவந்த செய்திகள் தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் விளக்கமளித்துள்ளார்.
இது குறித்து தெரிவித்துள்ள அவர், “இரணைமடு குளத்தில் காணப்படும் தண்ணீரானது கிளிநொச்சி மாவட்ட மக்களுக்கே காணமல் உள்ள நிலையில், அதனை யாழ்ப்பாணத்திற்கு கொடுப்பதற்கு முடியாது என்பதே என்னுடைய உறுதியான நிலைப்பாடாக காணப்படுகின்றது. அதனால் மாற்றுத் திட்டமொன்றினை தேடவேண்டிய நிலையில் நாம் அனைவரும் உள்ளோம்.
இதனையே நான் தெரிவித்திருந்தேன். ஆனால் எனக்கு எதிராக செயற்படும் சில ஊடகங்கள் இந்த செய்தியை திரிபுபடுத்தி எனக்கு இருக்கும் மக்கள் ஆதரவினை குறைப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றார்கள்.
யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மக்கள் இந்த உண்மையை புரிந்துகொள்வார்கள் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது” என தெரிவித்துள்ளார்.