பொதுத் தேர்தல் பணிகளுக்காக 1,459 அரச பேருந்துகள் சேவையில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளதாக அரச போக்குவரத்து சபை பிரதி பொது முகாமையாளர் ஏ. எச். பண்டுக தெரிவித்தார்.
நாடு தழுவியுள்ள வாக்களிப்பு மத்திய நிலையங்களில் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுப்படவுள்ள பொலிஸ் மற்றும் சிவில் பாதுகாப்பு தரப்பினர்களது போக்குவரத்து நடவடிக்கைகளுக்கு 192 பேருந்துகள் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளன.
பொதுத்தேர்தல் பணிகளுக்கான போக்குவரத்து நடவடிக்கைகள் அனைத்தும் முழுமைப் பெற்றுள்ளன. தூர பிரதேசங்களில் உள்ள வாக்களிப்பு மத்திய நிலையங்களுக்கு வாக்காளர்கள் செல்வதற்கு 800 பேருந்துகளுடன் சேவையில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளன.
வாக்குப்பதிவு இடம் பெற்றதன் பின்னர் வாக்குப் பெட்டிகளை பாதுகாப்பான முறையில் வாக்கு எண்ணும் மத்திய நிலையங்களுக்கு எடுத்து செல்வதற்கும் மேலதிகமாக, 61 பேருந்துகள் சேவையில் ஈடுப்படுத்தப்படவுள்ளன.
வாக்குச்சாவடிகளுக்கு வாக்காளர்கள் செல்வதற்கு நாடு தழுவிய ரீதியில் உள்ள அனைத்து அரச பேருந்து டிப்போக்களிலும் பேருந்துகள் சேவையில் ஈடுப்படுத்தப்படவுள்ளன. எந்நிலையிலும் போக்குவரத்து சேவையில் கால தாமதம் இடம்பெறாது என்றார்.