தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன், யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி வாக்குகள் எண்ணும் நிலையத்துக்கு வருகை தந்த நிலையில் அங்கு கூடியி்ருந்தவர்கள் தமது எதிர்ப்பை தெரிவித்தனர்.
இந்நிலையில் ஏற்பட்ட குழப்ப நிலையை அடுத்து நிலைமையைக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவர சிறப்பு அதிரப்படையினர் வரவழைக்கப்பட்டனர்.
இதனைத் தொடர்ந்து அவர்கள் மேற்கொண்ட அடிதடியை அடுத்து அங்கு பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது.
இதனிடையே கடும் எதிர்ப்புக்கு மத்தியிலும் சுமந்திரன் சுமார் 15 நிமிடங்களில் கடும் பாதுகாப்புடன் அங்கிருந்து அழைத்துச் செல்லப்பட்டார்.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் எம்.ஏ.சுமந்திரன், யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி வாக்குகள் எண்ணும் மத்திய நிலையத்துக்கு இன்று (07.08.2020) அதிகாலை 1.40 மணியளவில் கடும் பாதுகாப்புடன் வருகை தந்ததை அடுத்தே மேற்படி குழப்ப நிலை ஏற்பட்டது.
இந்தச் சம்பவங்களின் போது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வலி. தெற்கு பிரதேச சபை உறுப்பினர் தவராசா துவாரகன் மீது பொலிஸாரும் சிறப்பு அதிரடிப்படையினரும் தாக்குதலை மேற்கொண்டனர். அதனால் அவர் காயமடைந்தார்.
அத்தோடு வேடிக்கை பார்த்தவர்கள் மற்றும் செய்தி சேகரித்துக் கொண்டிருந்த ஊடகவியலாளர்கள் மீதும் அதிரடிப் படையினர் தாக்குதலை மேற்கொண்டனர்.