கட்டார் மற்றும் டுபாயிலிருந்து இலங்கை திரும்பிய நிலையில் வவுனியா பெரியகட்டு தனிமைப்படுத்தல் முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்த 120 பேர் இன்றைய தினம் விடுவிக்கப்பட்டனர்.
கொவிட்-19 நோய் தாக்கம் காரணமாக வெளிநாடுகளில் சிக்கித் தவித்த இலங்கையர்களை நாட்டிற்கு அழைத்து வரும் செயற்பாடுகள் அரசினால் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
அந்த வகையில் கட்டார் மற்றும் டுபாயிலிருந்து அழைத்து வரப்பட்ட பயணிகள் பெரியகட்டு தனிமைப்படுத்தல் முகாமிற்கு அழைத்து வரப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டிருந்தனர்.
அவர்கள் 14 நாட்கள் தனிமைப்படுத்தல் காலத்தை நிறைவு செய்த நிலையில், 120 பேர் அவர்களது சொந்த இடங்களான திருகோணமலை, யாழ்ப்பாணம், கொழும்பு, கம்பஹா, கேகாலை, கண்டி, பதுளை போன்ற பகுதிகளிற்கு பேருந்துகள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர்.
குறித்த பயணிகளிற்கான பி.சி.ஆர் பரிசோதனைகளும் முன்னெடுக்கப்பட்டிருந்ததுடன், கொரோனா தொற்று பீடிக்கவில்லை என்று உறுதிப்படுத்தப்பட்ட பின்னரே அவர்கள் தமது சொந்த இடங்களிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.