யாழ் வர்த்தகர்கள் குழப்பமடைய தேவையில்லை உங்களால் இயலுமாக இருந்தால் இரவு 10 மணி வரை கடைகளை திறந்து வியாபார நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியும் என யாழ்.வணிகர் சங்கத்தின் உப தலைவர் ஆர். ஜெயசேகரம் தெரிவித்துள்ளார்.
இன்று (செவ்வாய்க்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும் கூறுகையில் வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்தில் வடக்கு மாகாணத்தில் செயற்படும் வர்த்தக சங்கங்களின் பிரதிநிதிகள் மற்றும் இலங்கை போக்குவரத்து சபையின் பிராந்திய அத்தியட்சகர்கள் மற்றும் தனியார் போக்குவரத்து சபையின் சங்கத் தலைவர்கள் அழைக்கப்பட்டு நாட்டினை மீள இயல்பு நிலைக்கு கொண்டு செல்லும் முயற்சியாக யாழ்ப்பாணம் உட்பட முக்கியமான நகரங்களில் இரவு 10 மணிவரை வர்த்தக நிலையங்களை திறந்து வியாபார செயற்பாடுகளை முன்னெடுக்க முடியும் அவ்வாறான வர்த்தக நடவடிக்கைக்கு ஏதுவாக போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பில் கவனமெடுப்பதாக வடக்கு ஆளுநரால் அறிவிக்கப்பட்டது.
நாட்டில் ஏற்பட்ட கொரோணா தொற்று தாக்கத்தினால் ஊரடங்கு சட்டம் அமுல்ப்படுத்தப்பட்டதன் காரணமாக நாட்டின் அனைத்து பிரதேசங்களிலும் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு வியாபார செயற்பாடும் முடக்கப்பட்டிருந்தது. நாட்டின் பொருளாதாரத்தினை மீள கட்டியெழுப்பும் முகமாகவும் நாட்டை மீள வழமைக்கு கொண்டு வருவதற்குமாக இந்த அறிவுறுத்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இவ் அறிவுறுத்தல் இலங்கையின் சகல பாகங்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது.