வவுனியா நகர்ப்பகுதியில் நடைபாதைகளை ஆக்கிரமித்து வியாபாரத்தில் சிலர் ஈடுபட்டு வருவதனால் விபத்துக்கள் ஏற்படும் நிலை அதிகரித்துள்ளது.
வவுனியா இலுப்பையடி, புகையிரத நிலைய வீதி, கொரவப்பொத்தான வீதி போன்றவற்றில் வீதியோர வியாபாரத்தில் ஈடுபடுபவர்கள் நடைபாதையை முழுமையாக ஆக்கிரமித்து வியாபாரத்தில் ஈடுபடுவதால் மக்கள் வீதியால் நடந்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
அத்துடன் மக்கள் நடமாட்டம் கூடிய இடத்தில் இவ்வாறு ஆக்கிரமித்து வியாபாரத்தில் ஈடுபடுவதால் விபத்துக்களும் சம்பவித்து வருகின்றது. சில மாதங்களுக்கு முன்னர் குறித்த பகுதியில் சிறுமியொருவர் விபத்தில் பலியாகியிருந்த நிலையில் இதுவரை நகரசபையால் உரிய நடவடிக்கை எடுக்கப்படாததால் நடை பாதையை ஆக்கிரமித்து வியாபாரத்தில் ஈடுபடுவோரின் தொகையும் அதிகரித்து செல்கின்றது.
எனவே நகரசபை மற்றும் பொலிஸார் இவ் விடயம் தொடர்பில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்களாலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.