மஹிந்தவின் சகல வாக்குறுதிகளும் பொய்யாகிப்போன வரலாறே உண்டு; சாடுகின்றார் சஜித்

download 14 2
download 14 2

வாக்குறுதிகளை அள்ளி வழங்குவதில் மஹிந்த ராஜபக்ச வல்லவர். ஆனால், அவற்றைச் செயற்படுத்துவதில் அவர்
பூஜ்ஜிய நிலையில்தான் எப்போதும் உள்ளார். அதனால் அவரின் வாக்குறுதிகள் அனைத்தும் பொய்யாகிப்போன வரலாறே உண்டு.

இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

‘ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி தலைமையிலான அரசே தமிழ் மக்களுக்குத் தீர்வு வழங்கியது என்ற வரலாற்றுப் பதிவை இந்த ஆட்சியில் நாம் ஏற்படுத்துவோம்’ என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ள கருத்துக்குப் பதிலளிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“தமிழருக்கான தீர்வு விடயம் தொடர்பில் மஹிந்த ராஜபக்ச தற்போது வழங்கியுள்ள வாக்குறுதி உண்மையெனில் அவர் அதை உடனடியாகச் செயற்படுத்திக்காட்ட வேண்டும்.

அரசியல் தீர்வு சம்பந்தமான விடயங்களில் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி தலைமையிலான அரசுக்கு நாம் ஆதரவு வழங்குவோம். ஆனால், அந்தத் தீர்வு நியாயமானதாக இருக்க வேண்டும். சகல மக்களும் ஏற்கும் தீர்வாக இருக்க வேண்டும்.

நாட்டைப் பிளவுபடுத்தி தீர்வு  தருமாறு தமிழர்கள் கேட்கவில்லை. ஒருமித்த நாட்டுக்குள் நியாயமான தீர்வையே அவர்கள் விரும்புகின்றார்கள்” – என்றார்.