ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து விலகுமாறு, ரணில் விக்ரமசிங்கவை தாம் கேட்டுக் கொண்டதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பிக்குகள் முன்னணி தெரிவித்துள்ளது.
எனினும் தமது கோரிக்கையை ரணில் விக்ரமசிங்க நிராகரித்தாக ஐக்கிய தேசியக் கட்சியின் பிக்குகள் முன்னணியின் பிரதம செயலாளர் கீனியாவல பாலித்த தேரர் கூறியுள்ளார்.
கொழும்பில் நேற்று (புதன்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
தொடர்ந்தும் கருத்து கூறிய அவர், ´கடந்த 26 வருடங்களாக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து ரணில் விக்ரமசிங்கவால் எதனையும் செய்ய முடியவில்லை. அவர் எடுத்த பிழையான தீர்மானங்களே இன்றைய நிலைக்கு காரணம். நாம் அவருடன் தனியாக பேசினோம். எம்மால் கையளிக்கப்பட்ட கடிதத்தை அவர் போபிட்டிய தேரரின் முகத்தில் வீசி அதை ஏற்றுக்கொள்ள மாட்டேன் என கூறினார்.
ஆகவே, அவ்வாறான தலைவருடன் எப்படி முன்நோக்கி பயணிப்பது? ரணிலால் எதிர்காலத்தில் 10 தேரர்களின் ஆதரவை கூட பெற முடியாது. மஹிந்தவுடன் 14,000 தேரர்கள் உள்ளனர். காரணம் அவர் தேர்களை கௌரவப்படுத்துகின்றார் என்றார்.