சம்பந்தனுக்கு திடீர் உடல் நலக்குறைவால் நாடாளுமன்றக் குழுக் கூட்டம் ஒத்திவைப்பு

rt
rt

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் திடீர் உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்டுள்ளார் என்று வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் ரெலோ கட்சியின் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர், கொறடா தொடர்பான பதவிகள் குறித்த இறுதித் தீர்மானம் குறித்த அறிவிப்பு என்ன? என்று கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“நாளையும் நாளை மறுதினமும் நடைபெறவுள்ள நாடாளுமன்ற அமர்வுகளை அடுத்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுக் கூட்டம் நடைபெற ஏற்பாடாகியிருந்தது. குறித்த கூட்டத்தில் சில முக்கியமான தீர்மானங்கள் எடுக்கப்பட்டு அவை அறிவிக்கப்படும் என்று கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்களின் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டிருந்தது.

இருந்தபோதிலும் இரா.சம்பந்தனுக்கு ஏற்பட்டுள்ள திடீர் உடல்நிலை பாதிப்பால் குறித்த கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது” என்றார்.