சௌபாக்கியா தேசிய உணவு உற்பத்தி திட்டத்தில் விவசாய உபகரணங்கள் வழங்கி வைப்பு

aaaa
aaaa

பிரதமர் மஹிந்த ராஜபக்ச அவர்களின் ஆலோசனை மற்றும் வழிகாட்டலுக்கமைய விவசாயிகளை ஊக்குவிக்கும் வேலைத்திட்டம் அம்பாறை மாவட்டத்தில் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

‘சௌபாக்கியா’ தேசிய உணவு உற்பத்தி வேலைத்திட்டத்தின் கீழ் விவசாய திணைக்களத்தின் விவசாய விரிவாக்கல் பிரிவின் (மத்திய) ஊடாக அம்பாறை மாவட்டம் பெரியநீலாவணை கிராமத்தில் சிறந்த விவசாய நடைமுறை அலகின் கீழ் தெரிவு செய்யப்பட்ட விவசாய பண்ணையாளர்களுக்கு உபகரணங்களை இலவசமாக வழங்கி வைக்கும் நிகழ்வு பெரியநீலாவணை கமநல சேவை மத்திய நிலையத்தில் நடைபெற்றது.

பெரியநீலாவணை விவசாய விரிவாக்கல் மத்திய நிலையத்தின் பொறுப்பதிகாரி ஏ.எல்.எம்.சமீம் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் அம்பாறை மாவட்ட விவசாய திணைக்களத்தின் பிரதி விவசாயப் பணிப்பாளர் எம்.எப்.ஏ.சனீர், உதவிப் பணிப்பாளர் ஜெகத் வணசிங்க, விவசாய வியாபார ஆலோசகர் எம்.எம்.எம்.ஜெமீல் உட்பட அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.

தேசிய உணவுத் தேவையை பூர்த்தி செய்வதில் விவசாயிகளின் பங்களிப்பு, மற்றும் சிறுபோகத்தில் செய்கை பண்ணக்கூடிய மிளகாய், சோயா, பாசிப்பயறு, குரக்கன், நிலக்கடலை, சோளம், உழுந்து போன்ற பயிரினங்களை உற்பத்தி செய்வதன் அவசியம் பற்றியும் அதிகாரிகள் விளக்கமளித்தனர். சிறு வீட்டுத் தோட்ட உற்பத்தியாளர்களுக்கு தேவையான பயிர் கன்றுகளும் இலவசமாக வினியோகிக்கப்பட்டன.