ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் வீழ்ச்சிக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், மஹிந்த ராஜபக்ஷவுமே காரணம் எனத் தெரிவித்த பீல்ட் மார்ஷல் சரத்பொன்சேகா, சுதந்திரக் கட்சியின் மீது உண்மையான மதிப்பு உள்ளவர்கள் மீண்டும் குடும்ப ஆட்சி தலைதூக்குவதற்கு இடமளிக்கமாட்டார்கள் என்றும் கூறினார்.
முல்கிரிகல நகரில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
பாரிய போராட்டத்தின் மத்தியிலே நல்லாட்சி அரசாங்கத்தினை ஸ்தாபித்துள்ளோம்.எமது ஆட்சிலும் சில குறைப்பாடுகள் காணப்பட்டது. அதற்கு அரசியல் ரீதியான காரணிகள் பல செல்வாக்கு செலுத்தியது. ஆனால் எந்நிலையிலும் ஜனநாயகத்திற்கு எதிரான செயற்பாடுகளுக்கு துணைபோகவில்லை.
மத்திய வங்கியின் பிணைமுறி மோசடியை தேர்தல் பிரச்சாரமாக்கும் எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ அவரது ஆட்சிக்காலத்தில் மோசடி செய்யப்பட்ட தேசிய மோசடி தொடர்பில் எவ்வித கருத்துக்களையும் தெரிவிப்பது இல்லை. தேசிய பொருளாதாரத்தை கடந்த அரசாங்கமே சீரழித்தது.
கடந்த அரசாங்கத்தில் பொருளாதாரம் முன்னேற்றமடைந்திருந்தால் 2015 ஆம் ஆண்டு ஒவ்வொரு தனிநபரும் சொகுசு வாகனத்திற்கு சொந்தகாரர்களாகியிருப்பார்கள். தேர்தல் பிரச்சாரத்திற்காக அனைத்தினையும் மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிட முடியாது.
கடந்த அரசாங்கத்தில் அரசாங்கம் முன்னெடுத்த அனைத்து அபிவிருத்திகளிலும் அவரது குடும்ப உறுப்பினர்களின் பங்களிப்பு காணப்பட்டது அதனூடாக தேசிய நிதி கொள்ளையடிக்கப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.