கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வீட்டில் இறந்த ஒரு பெண்ணின் சகோதரர், தனது சகோதரியின் உடலை எடுக்க மருத்துவமனையில் மறுப்பதாகவும், இத்தாலி அதிகாரிகள் எடுத்து செல்ல வேண்டும் என்று வேதனையுடன் வீடியோ வெளியிட்டார். இந்த வீடியோ கொரோனாவின் கொடூர முகத்தை பிரதிபலிப்பதாக உள்ளது.
தெரசா ஃபிரான்சீஸ் வயது 47. இவர் தனது குடும்பத்துடன் இத்தாலியின் தெற்கு நகரமான நேபிள்ஸில் வசித்து வந்தார். கடந்த வாரம் கொரோனா வைரஸின் அறிகுறிகள் இவருக்கு காட்டத் தொடங்கி உள்ளது.
இதையடுத்து அவரது உடல்நிலை விரைவாக மோசமடைந்தது. ஆனால் கொரோனா வைரஸ் நோய்க்கான பரிசோதனையின் முடிவுகள் அறியப்படுதவற்கு முன்பே தெரசா சனிக்கிழமை இறந்தார்.
இதையடுத்து தெரசாவுக்கு கொரோனா இருந்ததா இல்லையா என்பது தெரியாத காரணத்தால், சுகாதார பணியாளர்களும் உள்ளூர் மருத்துவமனையும் அவரது உடலை எடுக்க மறுத்துவிட்டன.
இதனால் அடக்கம் செய்ய முடியாமல் அவரது சகோதரர் லூகா ஃபிரான்சீஸ் தவித்தார். இதையடுத்து வேதனை அடைந்த அவர் பேஸ்புக்கில் தனது சகோதரியின் உடலுடன் முன்புறம் நின்றபடி வீடியோ ஒன்றை வெளியிட்டார்.
அதில் “என் சகோதரி இறந்துவிட்டார், படுக்கையில் இருக்கிறார். என்ன செய்வது என்று எனக்குத் தெரியவில்லை.
இத்தாலி அதிகாரிகள் என்னைக் கைவிட்டதால் அவளுக்குத் தகுதியான இறுதி மரியாதையை என்னால் கொடுக்க முடியாது.
நாங்கள் பாழடைந்துவிட்டோம். இத்தாலி எங்களை கைவிட்டுவிட்டது. ஒன்றாக வலுவாக இருப்போம். தயவுசெய்து இந்த வீடியோவை எல்லா இடங்களிலும் பகிர்ந்து கொள்ளுங்கள்” என்று அவர் வேதனையுடன் பகிர்ந்துள்ளார் .