தென்னாபிரிக்காவின் ஜோகன்னஸ்பேர்க்கிற்கு அருகிலுள்ள பழங்கால தேவாலயத்தில் இடம்பெற்ற மோதலையடுத்து 5 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த தேவாலயத்தில் நேற்று (சனிக்கிழமை) காலை அங்கிருந்தவர்களை ஆயுதம் தாங்கிய குழுவினர் பணயக் கைதிகளாக பிடித்து வைத்திருந்த நிலையில் பொலிஸார் அழைக்கப்பட்டதைத் தொடர்ந்து இவ்வாறு தாக்குதல் நடத்தியவர்கள் கொல்லப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
குறித்த தேவாலயத்தின் தலைமை தொடர்பாக தொடர்ந்துவந்த பிரச்சினையின் ஒரு கட்டமாக ஏற்பட்ட இந்தச் சம்பவத்தில் தாக்குதல் நடத்த முனைந்த ஆண்கள் குழுவொன்றின் 40 பேரை கைதுசெய்துள்ளதாகவும் மேலும் 6 பேர் காயமடைந்துள்ளதாகவும் பொலிஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், குறித்த குழுவினர் பணயக் கைதிகளாக பிடித்து வைத்திருந்த குழந்தைகள் உட்பட மேலும் பலரை பொலிஸார் மீட்டுள்ளனர்.
இதேவேளை, இந்தக் குழுவினரிடம் இருந்து பெருமளவான ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் இடம்பெற்ற தேவாலயத்திற்கு சொத்துமதிப்பு அதிகம் உள்ளதாகவும் அதன் தலைவர் கடந்த 2016இல் இறந்ததிலிருந்து தேவாலய தலைமை தொடர்பான பிரச்சினை இருந்து வந்துள்ளதாகவும் 2018ஆம் ஆண்டில் உறுப்பினர்களிடையே துப்பாக்கிச் சூடு சம்பவம் இடம்பெற்றுள்ளமை பதிவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.