அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தாக்கம் நான்கு மில்லியனை கடந்துள்ள நிலையில் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இந்த வைரஸ் தொற்றினை காரணம் காட்டி புளோரிடாவில் நடைபெறவிருந்த குடியரசு கட்சி மாநாட்டை ரத்து செய்துள்ளார்.
இந்த மாநாடு இடம்பெறுவதற்கு இது தகுந்த தருணம் அல்லவெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். குறித்த மாநாட்டை அடுத்த மாதம் 24 ஆம் திகதி நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுயள்ளன.
இந்த மாநாட்டின் ஊடாக அமெரிக்காவில் எதிர்வரும் நவம்பர் மாதம் இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலுக்கான குடியரசு கட்சியின் வேட்பாளராக அமெரிக்கா ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உத்தியோகபூர்வமாக நியமிக்கப்படவிருந்தார். இந்த நிலையில் அமெரிக்காவில் மாத்திரம் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக இதுவரையில் 41 இலட்சத்து 68 ஆயிரத்து 117 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன் அங்கு இதுவரையில் ஒரு இலட்சத்து 47 ஆயிரத்து 281 பேர் உயிரிழந்துள்ளனர். இதேவேளை சர்வதேச ரீதியில் கொரோனா வைரஸ் தொற்றுறுதியானோர் எண்ணிக்கை ஒரு கோடியே 56 இலட்சத்து 38 ஆயிரத்து 669 ஆக அதிகரித்துள்ளது.
அத்துடன் உலகளாவிய ரீதியில் இதுவரை இந்த வைரஸ் தொற்று காரணமாக 6 இலட்சத்து 35 ஆயிரத்து 581 பேர் உயிரிழந்துள்ளனர். எவ்வாறாயினும், கொரோனா வைரஸ் தொற்றில் பீடிக்கப்பட்டிருந்த 95 இலட்சத்து 27 ஆயிரத்து 663 பேர் குணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.