ரஜினியின் அரசியல் வருகைக்கான 25 ஆண்டுகால எதிர்பார்ப்பு தற்போது முற்றிப் புள்ளியில் முடிவடைந்துள்ளது. அதாவது ஜனவரி மாதம் கட்சி தொடங்கி, 2021 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடப்போவதாக ரஜினிகாந்த் அறிவித்திருந்தார். அதோடு, கட்சி துவங்கும் திகதியை டிசம்பர் 31ஆம் திகதி தெரிவிப்பதாக கூறினார் ரஜினி.
ஆனால், திடீரென ‘அண்ணாத்த’ படப்பிடிப்பில் கலந்து கொண்ட ரஜினிகாந்திற்கு உடல்நலம் பாதிக்கப்பட்டது. இதனால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதோடு, மூன்று நாட்கள் சிகிச்சையும் பெற்றார்.
அதேபோல், அங்குள்ள மருத்துவர்கள் கொரோனா வைரஸ் பாதிக்கும் வகையான எந்த நடவடிக்கையிலும் ஈடுபடக் கூடாது என ஆலோசனை வழங்கினர். இதனைத் தொடர்ந்து சென்னை திரும்பிய ரஜினிகாந்த், தான் கட்சி தொடங்க வில்லை என தெரிவித்தார். இதனால் அவருடைய ரசிகர்கள் பலர் அதிருப்தியில் இருந்து வருகின்றனர்.
இந்த நிலையில் ரஜினியின் தீவிரமான ரசிகரும், நடிகரும், இயக்குனருமான நடிகர் ராகவா லாரன்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் இது பற்றிய பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.
மேலும் அந்த பதிவில் ராகவா லாரன்ஸ், ரஜினியின் முடிவு 100% சரி என்றும், மற்றவற்றை விட ரஜினியின் உடல் நலம் தான் தன்னைப்போன்ற ரசிகருக்கு முக்கியம் என்றும் பதிவிட்டிருக்கிறார். அதோடு, ரஜினியின் இந்த முடிவு சுயநலமில்லா முடிவு என்று குறிப்பிட்டிருக்கிறார் ராகவா லாரன்ஸ்.
இறுதியாக லாரன்ஸ் தனது ட்விட்டர் பதிவில், ‘உங்களுடைய உடல் நலத்திற்காக நான் தினமும் ராகவேந்திரா சுவாமியை வேண்டுகிறேன். குருவே சரணம்’ என்று பதிவிட்டுள்ளார். இந்தப் பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை எதிர்த்து யார் பேசினாலும் தைரியமாக குரல் கொடுப்பவர் தான் லாரன்ஸ். மக்கள் மத்தியில் லாரன்ஸுக்கு நல்ல மதிப்பும், மரியாதையும் இருந்து வருகிறது.
இந்த நிலையில் அவர் ரசிகனை தாண்டி ஆதரவாக பேசுவதை பார்த்து அரசியலுக்கு அடி போடுவது போல் இருக்கிறதே என்ற ஒரு அவப்பெயர் இருந்து வந்தது. தற்போது ரஜினியின் அறிக்கையால் அந்த ஆசையில் மண்ணள்ளிப் போட்டது போல் ஆகி விட்டது என்பது தான் 100% உண்மை.