ஜகமே தந்திரம் படத்திற்காக தனுஷ் எழுதி, பாடியிருக்கும் நேத்து பாடல் நாளை வெளியாகவிருக்கிறது. ஆனால் அதை விளம்பரம் செய்யும் மூடில் தனுஷ் இல்லை. ஜகமே தந்திரம் ஓடிடியில் வெளியாகப் போகும் கோபத்தில் இருக்கிறார் தனுஷ்.
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்திருக்கும் படம் ஜகமே தந்திரம். பெரும்பாலான காட்சிகளை லண்டனில் படமாக்கினார்கள்.
ஜகமே தந்திரம் படத்தை தனுஷ் பெரிதும் எதிர்பார்த்த நிலையில் அதை நெட்ஃப்ளிக்ஸில் வெளியிடுகிறார்கள். தன் படத்தை திரையரங்கு அல்லாமல் ஓடிடியில் வெளியிடுவதற்கு தனுஷ் கடும் எதிர்ப்பு தெரிவித்தும் பலனில்லை.
ஜகமே தந்திரம் யூன் மாதம் 18ம் தேதி நெட்ஃப்ளிக்ஸில் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்டுவிட்டார்கள். ஓடிடி வெளியீடு முடிவானதில் இருந்து தனுஷ் செம கடுப்பில் இருக்கிறார். அதனால் ஜகமே தந்திரம் படம் குறித்து சமூக வலைதளங்களில் விளம்பரம் செய்வதை நிறுத்திவிட்டார்.
படத்தை இயக்கிய கார்த்திக் சுப்புராஜ் தான் சமூக வலைதளங்களில் விளம்பரம் செய்து கொண்டிருக்கிறார். இந்நிலையில் ஜகமே தந்திரம் படத்திற்காக தனுஷ் எழுதிப் பாடியிருக்கும் நேற்று பாடல் நாளை காலை 11 மணிக்கு வெளியாகும் என்று கார்த்திக் சுப்புராஜ் ட்வீட் செய்துள்ளார். ஆனால் அது பற்றி தனுஷ் கண்டுகொள்ளவில்லை.
ஜகமே தந்திரம் படத்தை கைகழுவிய தனுஷ் தற்போது தி கிரே மேன் ஹாலிவுட் படத்தில் நடித்து வருகிறார். இதற்காக அவர் அமெரிக்காவில் இருக்கிறார்.
நாடு திரும்பியதும் கார்த்திக் நரேன் இயக்கத்தில் தான் நடித்து வந்த டி43 படப்பிடிப்பில் மீண்டும் கலந்து கொள்கிறார். இந்நிலையில் கர்ணன் படத்திற்கு கிடைத்த அமோக வரவேற்பை அடுத்து மீண்டும் மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார் தனுஷ்.
மாரி செல்வராஜ், தனுஷ் வெற்றிக் கூட்டணி மீண்டும் சேரும் படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு துவங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.