நான் பல விடயத்தில் என் தந்தையைப் போல: கீர்த்தி சுரேஷ்

keerthi
keerthi

தன் அப்பாவின் குணம் பல தன்னிடம் இருப்பதாக கீர்த்தி சுரேஷ் தெரிவித்துள்ளார்.

தந்தையர் தினம் இன்று உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. டாடிஸ் லிட்டில் ப்ரின்சஸ் எல்லாம் வாழ்த்து தெரிவித்துக் கொண்டிருக்கிறார்கள். தந்தையர் தினத்தை முன்னிட்டு கீர்த்தி சுரேஷ் பேட்டி அளித்துள்ளார்.

அந்த பேட்டியில் கீர்த்தி சுரேஷ் தன் அப்பா, அம்மா, கெரியர் பற்றி கூறியதாவது,

என் தந்தையின் குணம் பல என்னிடம் இருக்கிறது. நான் வாழ்க்கையில் கடைபிடிக்கும் சில அடிப்படை விஷயங்கள் என் தந்தையிடம் இருந்து எனக்கு வந்தது. என் தந்தைக்கு நான் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். என் முதல் படத்தின் முதல் நாள் ஷூட்டிங்கின்போது அம்மா சொன்னது இன்னும் நினைவில் இருக்கிறது.

நேரத்திற்கு படப்பிடிப்புற்கு செல்ல வேண்டும், ஒழுங்காக நடந்து கொள்ள வேண்டும், செட்டில் இருக்கும் அனைவரிடமும் சரிசமமாக பழக வேண்டும் என்று அம்மா தெரிவித்தார்.

பெண்குயின் படத்தில் வரும் ஒரு காட்சியில் நடிக்கும்போது நான் டயலாக்கை சொதப்பி பல டேக்குகள் வாங்கினேன். பெண்குயின் குழு ஒரு அருமையான குழு. அந்த படத்தில் நடித்த அனுபவத்தை மறக்கவே முடியாது. அவர்களுடன் சேர்ந்து மீண்டும் பணியாற்ற காத்திருக்கிறேன்.

பெண்குயின் படத்தில் நடித்ததன் மூலம் நான் நிறைய கற்றுக் கொண்டேன். அனைத்து குடும்பங்களிலும் அம்மா தான் உண்மையான ஹீரோ. நான் ஒன்றும் திடீர் என்று என் உடல் எடையை குறைக்கவில்லை. 7 மாதங்களாக ஒர்க்அவுட் செய்து தான் எடையை குறைத்தேன் என்றார்.

புதுமுகம் ஈஸ்வர் கார்த்திக் இயக்கத்தில், கார்த்திக் சுப்புராஜ் தயாரிப்பில் கீர்த்தி கர்ப்பிணியாக நடித்த பெண்குயின் படம் நேற்று முன்தினம் ஓடிடியில் வெளியானது. படத்தை பார்த்த அனைவரும் கீர்த்தி சுரேஷின் நடிப்பை பாராட்டியுள்ளனர். ஆனால் கதையில் சுவாரஸ்யம் இல்லாததால் கீர்த்தியின் அபார நடிப்பால் கூட பெண்குயின் படத்தை காப்பாற்ற முடியவில்லை என்று விமர்சனம் எழுந்துள்ளது.

லாக்டவுனுக்கு முன்பு கீர்த்தி சுரேஷ் சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வந்த அண்ணாத்த படத்தில் நடித்தார். அந்த படத்தில் கீர்த்தி ரஜினியின் தங்கையாக நடிப்பதாக கூறப்படுகிறது. இருப்பினும் தனது கதாபாத்திரம் குறித்து கீர்த்தி இதுவரை வாய் திறக்கவில்லை. அண்ணாத்த படத்தில் நயன்தாரா வழக்கறிஞராக நடிக்கிறாராம். மேலும் குஷ்பு, மீனா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.

அண்ணாத்த படத்தை இந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியிட முடிவு செய்தார்கள். ஆனால் கொரோனா லாக்டவுனால் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ஷூட்டிங்கை வரும் நவம்பர் மாதத்திற்குள் முடித்து அடுத்த ஆண்டு பொங்கலுக்கு ரிலீஸ் செய்ய திட்டமிட்டார்கள். ஆனால் கொரோனா வைரஸ் பிரச்சனை தற்போதைக்கு தீர்வதாக இல்லை. அதனால் படப்பிடிப்பை தற்போதைக்கு துவங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, அண்ணாத்த படத்தை அடுத்த ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதம் ரிலீஸ் செய்ய திட்டமிடுகிறார்களாம்.

இந்நிலையில் பரசுராம் இயக்கத்தில் மகேஷ் பாபு நடிக்கும் சர்கார் வாரி பாட்டா படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார் கீர்த்தி சுரேஷ். இது தான் கீர்த்தி சுரேஷ் மகேஷ் பாபுவுடன் சேர்ந்து நடிக்கும் முதல் படம் ஆகும். சர்கார் வாரி பாட்டா பட அறிவிப்பு மகேஷ் பாபுவின் தந்தை கிருஷ்ணாவின் பிறந்தநாளான மே 31ம் தேதி வெளியானது.