திருமாவளவனுக்கு எச்சரிக்கை விடுத்த காயத்ரி ரகுராம்!

NTLRG 20190917173302204466
NTLRG 20190917173302204466

கந்த சஷ்டி கவசம் குறித்த பிரச்சனை கடந்த சில நாட்களாக பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில் இதுகுறித்து தற்போது அரசியல் தலைவர்களும் கருத்துக்கூற தொடங்கிவிட்டனர்.

குறிப்பாக விடுதலை சிறுத்தைகள் தலைவர் தொல் திருமாவளவன் அவர்கள் இதுகுறித்து வெளியிட்டுள்ள வீடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த வீடியோவிற்கு கண்டனம் தெரிவித்து நடிகையும், நடன இயக்குனரும் ,பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவருமான காயத்ரி ரகுராம் தனது சமூக வலைத்தளத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் அவர் கூறியிருப்பதாவது:

மிஸ்டர் திருமாவளவன் அவர்களே! நீங்கள் வேல் குத்தி இருக்கின்றீர்களா? அல்லது பால்காவடி எடுத்து இருக்கின்றீர்களா? அல்லது காவடி எடுத்து இருக்கின்றீர்களா? பெரிதாக பேச வந்து விட்டீர்கள். நீங்கள் திமுகவுக்கு கூஜா தூக்குகிறீர்கள், மதமாற்றம் செய்ய கைநீட்டி காசு வாங்குகிறீர்கள். அதற்காக நீங்கள் சொல்வதெல்லாம் உண்மை என்று ஆகிவிடுமா?

இந்த பிரச்சனைக்கு உங்களுக்கு எந்த சம்பந்தமும் இல்லை என்பதை நாங்கள் நம்ப வேண்டுமா? நாங்கள் எதற்காக உங்களை நம்ப வேண்டும்? சுரேந்தரன் பக்கத்தில் நின்று புகைப்படம் எடுத்துள்ளீர்கள். சுந்தரவள்ளியும் புகைப்படம் எடுத்து இருக்கின்றார்கள். திமுகவுக்கு அவர்கள் பிரச்சாரம் செய்திருக்கிறார்கள். நாங்கள் என்ன இளிச்சவாயர்களா?

பிராமணர்கள் சுப்பிரமணியம் என்று பெயர் வைத்துள்ளார்கள். நீங்கள் முருகன் பெயரை வைத்திருக்கின்றீர்களா? உங்கள் பெயர் முருகரா? அல்லது சுப்பிரமணியா? எங்களில் பலர் முருகன் பெயர் தான் நாங்கள் வைத்துள்ளோம். உங்களில் யாராவது முருகன் பெயர் வைத்திருக்கிறீர்களா?

தமிழ்நாடு கலாச்சாரத்தையும் கடவுளையும் அசிங்கப்படுத்தும் நீங்கள் இதுகுறித்து பேசுவதற்கு எந்த யோக்கியதையும் கிடையாது. தயவு செய்து இத்துடன் நீங்கள் நிறுத்தி கொள்ளுங்கள். இனிமேலும் நாங்கள் சும்மா இருக்க மாட்டோம்’ என்று காயத்ரி ரகுராம் ஆவேசமாக அந்த வீடியோவில் பேசியுள்ளார்.