மீண்டும் தொடங்கும் ‘பொன்னியின் செல்வன்’ படப்பிடிப்பு!

பிரபல இயக்குநர் மணிரத்னம் இயக்கிவரும் ’பொன்னியின் செல்வன்’ திரைப் படத்தின் படப்பிடிப்பு கொரோனாத் தொற்றுப் பரவல் காரணமாக கடந்த ஆறு மாதங்களாக நடைபெறாத நிலையில் படப்பிடிப்பு நடத்த இந்தியாவின் மத்திய மாநில அரசுகள் அனுமதி அளித்ததை அடுத்து மீண்டும் படப்பிடிப்பு இம்மாத மத்தியில் தொடங்க மணிரத்னம் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

‘பொன்னின் செல்வன்’ படத்திற்காக ஐதராபாத்திலுள்ள ஸ்டூடியோவில் பிரமாண்டமான செட்டுகள் அமைக்கப்பட்டு வருவதாகவும் இந்த செட்களில் நவம்பர் இரண்டாவது வாரம் ’பொன்னியின் செல்வன்’ படப்பிடிப்பு தொடங்கும் என்றும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

உண்மையில் இந்த படத்தை அவர் இந்தியா, இலங்கை, தாய்லாந்து உட்பட பல நாடுகளில் படமாக்க திட்டமிட்டு இருந்ததாகவும், ஆனால் கொரோனா வைரஸ் காரணமாக ஒருசில நாடுகளின் அரசு கெடுபிடிகள் காரணமாக தற்போது செட் அமைத்து அதில் படமாக்க அவர் முடிவு செய்துள்ளதாகவும் தெரிகிறது.

இரண்டு பாகங்களாக வெளிவர உள்ள இந்த திரைப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்து வருகிறது என்பதும் இசைப்புயல் ஏ.ஆர் ரஹ்மான் இந்த படத்திற்கு இசையமைத்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.