வயிற்றுப்புண் போன்ற பிரச்சனைகளுக்கு விரைவில் தீர்வு தரும் சிறுகுறிஞ்சான்!

1618654583 9575
1618654583 9575

நீரிழிவு நோயாளிகளின் பாதிப்புகள் குறைய குறிஞ்சாக் கீரை மிகவும் உதவுகிறது. அதிக கசப்புத் தன்மை கொண்ட இந்தக் கீரை உடலின் சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது. மேலும் சர்க்கரை நோயின் பாதிப்பு ஏற்படாமல் வருமுன் காக்க குறிஞ்சாக் கீரை சிறந்த மருந்தாகும்.

குறிஞ்சாக் கீரையை நன்கு நீர்விட்டு அலசி, அதனுடன் சின்ன வெங்காயம் சேர்த்து சிறிது நீர்விட்டு அவித்து சிறிது நேரம் அப்படியே ஊறவைத்து சாப்பிட வேண்டும். இவ்வாறு வாரம் இருமுறை சாப்பிட்டு வந்தால் நீரிழிவு நோயின் தாக்கம் குறையும்.

நாவற் பழக் கொட்டையையும், சிறுகுறிஞ்சான் கீரையையும் நிழலில் உலர்த்தி பொடியாக்கி வைத்துக்கொண்டு தினமும் காலையில் 1 குவளை தண்ணீருக்கு 1 தேக்கரண்டி பொடி வீதம் இட்டு காய்ச்சி கஷாயமாக்கி அருந்தி வந்தால் நீரிழிவு நோய் கட்டுப்படும்.

உணவு முறை மாறுபாட்டாலும், நேரம் தவறி உணவு உண்பதாலும் வாயு சம்பந்தப்பட்ட உணவுகளை அடிக்கடி உண்பதாலும் சிலரின் வயிற்றில் வாயுவின் சீற்றம் மிகுந்து குடலின் உட்புறச் சுவர்களைப் பாதிக்கிறது. மேலும் மது, புகை, போதை வஸ்துக்களாலும் குடல் புண்ணாகிவிடும். இதனால் வாயிலும் புண்கள் உண்டாகும்.

இவர்கள் குறிஞ்சாக் கீரையை பாசிப் பருப்புடன் சேர்த்து காரம் சேர்க்காமல் வேகவைத்து கடைந்து நெய் கலந்து உணவில் சேர்த்துக்கொண்டால் வயிற்றுப்புண் மற்றும் வாய்ப்புண் விரைவில் குணமாகும். மேலும் வயிற்றுப் பூச்சிகள் நீங்கும்.

குறிஞ்சாக் கீரையை நிழலில் உலர்த்தி பொடி செய்து தினமும் காலையில் கஷாயம் செய்து சாப்பிட்டு வந்தால் உடலில் நோயின் தாக்கம் ஏதுமின்றி நல்ல வலுவுள்ள உடலைப் பெறலாம்.

சிலர் எப்போது பார்த்தாலும் பசியில்லை என்று புலம்பிக்கொண்டே இருப்பார்கள். இவர்கள் தினமும் குறிஞ்சாக் கீரையை பாசிப்பருப்புடன் சேர்த்து சமைத்து உணவில் சேர்த்துக்கொண்டால் நன்கு பசியைத் தூண்டும். ஜீரண சக்தியை அதிகரிக்கும்.

வாரம் இருமுறை குறிஞ்சாக் கீரையை உணவில் சேர்த்து உண்டு வந்தால் உடல் சூடு தணியும். கடும் சுரம், இருமலால் பாதிக்கப்பட்டவர்கள் குறிஞ்சாக் கீரையை நீரில் கொதிக்க வைத்து வடிகட்டி அந்த நீரை அருந்தி வருவது நல்லது. குறிஞ்சாக் கீரையை வேகவைத்து அதனுடன் தேங்காய் துருவல், உப்பு சேர்த்து சாப்பிட்டு வந்தால் ஈரலில் ஏற்படும் பாதிப்புகள் நீங்கும்.