கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘கைதி’ படம் நாளை வெளியாகிறது.
இந்த படத்தின் படப்பிடிப்பு அனுபவங்கள் குறித்து கார்த்தி அளித்துள்ள பேட்டியில் கூறியதாவது:
கைதி ஓர் இரவில் நடக்கும் கதை. அடுத்து என்ன நடக்கும் என்பதை யூகிக்கவே முடியாது. இப்படி நடந்தால் என்ன ஆகும் என்பது மாதிரியான படம். லோகேஷ் இதை எழுதியுள்ளது அவ்வளவு விறுவிறுப்பான முறையில் இருக்கிறது. நான் கல்லூரியில் படிக்கும்போது இது போன்ற படங்களைத்தான் விரும்பிப் பார்ப்பேன்.
அதனால் எல்லோருக்கும் இந்தப் படம் பிடிக்கும். நான்கு மணிநேரத்தில் நடக்கும் கதை. ‘ஸ்பீட்’, ‘டை ஹார்ட்’ போன்ற படங்களைப் பார்க்கும்போது அதில் பாடல்களுக்கு எங்கு நேரம் இருக்கும்?
2-3 வருடங்கள் நடக்கும் கதை என்றால் அதில் பாடல் இருப்பதைப் புரிந்துகொள்ளலாம்.
‘தீரன் அதிகாரம் ஒன்று’ தீவிரமான படம். அதை சரிக்கட்ட காதல் காட்சிகள் தேவைப்பட்டன. அது இல்லையென்றால் ‘தீரன் அதிகாரம் ஒன்று’ பயங்கரமான படமாகத் தெரிந்திருக்கும். ஆனால் ’கைதி’யில் அது தேவைப்படவில்லை. படத்தில் பரபரப்பு இருந்தாலும் மக்கள் ரசிக்கும் வகையில் லேசான தருணங்களும் இருக்கும்.
இவ்வாறு கார்த்தி கூறியுள்ளார்.