மது போதையில் வாகன சாரதி – இராணுவத்தினரின் முன்மாதிரியான செயற்பாடு

IMG 8615
IMG 8615

யாழ்ப்பாணத்திலிருந்து அக்கரைப்பற்றுக்கு பயணித்த அரச பேருந்தின் சாரதி மதுபோதையில் இருந்தமையால் அதில் பயணித்த 46 பயணிகளையும் மற்றொரு பேருந்தில் அக்கரைப்பற்றுக்கு அனுப்பி வைக்கப்பட்டு சாரதி எச்சரிக்கப்பட்டார்.

யாழ்ப்பாணத்திலிருந்து வெளிமாவட்டங்களுக்கு பயணிக்கும் பேருந்துகளை சோதனையிடும் நடவடிக்கையை 512ஆவது படைத்தளத்தைச் சேர்ந்த இராணுவத்தினர் நாவற்குழியில் முன்னெடுத்திருந்தனர்.

யாழ்ப்பாணத்திலிருந்து 7.45 மணிக்கு அக்கரைப்பற்றுக்கு புறப்படும் பேருந்து நாவற்குழி சோதனைச் சாவடியில் மறிக்கப்பட்டு சோதனையிட முற்பட்ட போது, சாரதி மதுபோதையில் இருந்தமை கண்டறியப்பட்டது.

சாரதியை பேருந்திலிருந்து இறக்கிவிட்ட இராணுவத்தினர், பேருந்தை சோதனையிட்ட போது, 2 பியர் ரின்களும் சாராயப் போத்தல் ஒன்றும் சாரதியின் இருக்கைக்கு கீழ் இருந்து மீட்கப்பட்டன.

சாரதி கடுமையாக எச்சரிக்கைப்பட்டதுடன், அவர் தொடர்பில் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கும் வகையில் இலங்கை போக்குவரத்துச் சபையின் கோண்டாவில் சாலை முகாமையாளருக்கு அறிவிக்கப்பட்டது.