இலங்கையின் புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள கோத்தாபய ராஜபக் ஷ முக்கிய அரச பதவிகளுக்கு இராணுவ அதிகாரிகளை நியமிக்கின்றார். ஆயுதம் தாங்கிய பாதுகாப்பு படையினர் வீதிகளில் இறங்கலாம் என வர்த்தமானி அறிவித்தல்களை வெளியிடுகின்றார். இவ்வாறான செயல்கள் ஊடாக சர்வாதிகாரப் போக்குடைய இராணுவ ஆட்சிக்கு வித்திடுகின்றாரா என சந்தேகம் எழுந்துள்ளதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சந்திரசேகரம் தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்தில் உள்ள ஜே.வி.பியின் கட்சி அலுவலகத்தில் அவர் நேற்று நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பின்போதே இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
நாட்டில் நடைபெற்று முடிந்துள்ள ஜனாதிபதித் தேர்தலில் இனவாதத்தை மதவாதத்தை தூண்டி சிங்கள தேசியத்தை உசுப்பேத்தி கோத்தாபய ராஜபக் ஷ பதவியைப் பெற்று குளிர் காய்ந்து வருகின்றார். அவர் ஆட்சிக்கு வந்ததும் ராஜபக் ஷாக்களின் குடும்ப ஆட்சி மீண்டும் நடந்தேறியுள்ளது. ஒரு சகோதரர் பிரதமர் இன்னொரு சகோதரர் முக்கிய அமைச்சர் என குடும்ப ஆட்சி மெல்ல மெல்லத் தொடங்கியுள்ளது. மஹிந்த ராஜபக் ஷ ஆட்சியில் இருந்தபோதும் இதே நிலைமையான குடும்ப ஆட்சியே காணப்பட்டது. ஜனாதிபதியாக கோத்தாபய பதவி ஏற்று உரையாற்றும் போதே தாம் தனிச்சிங்கள வாக்குகளில் வெற்றிபெற்றதாகவும் அனைத்து மக்களையும் தன்னுடன் இணையுமாறும் உரையாற்றியிருந்தார். இது சிறுபான்மை இனங்கள் மத்தியில் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.ராஜபக் ஷ குடும்பம் ஆட்சிக்கு வந்து சில நாட்களிலேயே தங்களுக்கு எதிராக தொடுக்கப்பட்டுள்ள வழக்குகள், விசாரணைகள் போன்றவற்றில் தலையீடு செய்ய ஆரம்பித்துள்ளனர். அதன் முக்கிய சம்பவமாக நாட்டின் புலனாய்வுத் துறைப் பணிப்பாளருக்கு இடமாற்றம், பதவிஇறக்கம் போன்ற நடவடிக்கைகளில் இறங்கியுள்ளனர்.
இது மட்டுமல்லாது, அரசின் முக்கிய உயர் பதவிகளுக்கு ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரிகளை நியமித்து வருகின்றனர். அதிலும் குறிப்பாக, இலங்கையில் நடைபெற்ற போரின்போது பல குற்றச்சாட்டுக்களுக்குள்ளான இராணுவ அதிகாரிகளை உயர் பதவிகளில் அமர்த்தியுள்ளார். இது நீதியை எதிர்பார்த்திருக்கும் சிறுபான்மை இன மக்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுமட்டுமல்லாது, நாடு முழுவதும் ஆயுதம் தாங்கிய பாதுகாப்பு படையினரை நிலைநிறுத்துவதற்கான வர்த்தமானி அறிவித்தல்களை ஜனாதிபதி வெளியிட்டுள்ளார்.இந்தச் செயற்பாடானது வடக்கு, கிழக்கில் மீண்டும் இராணுவ பலப்படுத்தலை எடுத்துக்காட்டுகின்றது. எதிர்காலத்தில் நடைபெறவுள்ள பொதுத்தேர்தலில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெறும் நோக்கில் ராஜபக் ஷ குடும்பம் சில காய்நகர்த்தல்களை முன்னெடுத்துவருகின்றது. அந்த வகையில் பொதுத்தேர்தல் நடைபெறும் வரை அமைதியாக பயணிக்கும் அவர்கள் தேர்தலின் பின்னர் மீண்டும் குடும்ப ஆட்சி, அராஜக ஆட்சி போக்கில் களம் இறங்கும்.கோத்தாபய ராஜபக் ஷ ஜனாதிபதியாக தனிச்சிங்கள வாக்குகளினால் வந்துள்ளார். எனவே பொதுபலசேனா இனி இயங்கத்தேவையில்லை என ஞானசார தேரர் கூறியுள்ளார். அவர் ஏன் அவ்வாறு கூறினாரெனில், இத்தனை காலமும் பொதுபலசேனா செய்துவந்த மதவாத போக்கினை தற்போதைய அரசு செய்கின்றது. எதிர்காலத்திலும் செய்யும் என்பதாலேயே. எது எவ்வாறிருப்பினும், நாட்டில் ஜனநாயகம் மீறப்பட்டாலோ கடன் சுமைகள் அதிகரிக்கப்பட்டாலோ அரச வளங்கள் துஷ்பிரயோகம் செய்யப்பட்டாலோ மக்கள் போராட் டங்கள் உருவாகும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை என்றார்.