வவுனியா ஓமந்தை காவல்துறை பிரிவிற்குட்பட்ட நவ்வி பகுதியில் 7 வயது பாடசாலை மாணவன் கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த சிறுவன் நேற்றையதினம் மதியம் 2 மணியளவில் வீட்டில் இருந்து ரியூசன் செல்வதற்காக சென்றுள்ளார். எனினும் நீண்ட நேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை.
இதனையடுத்து அவரை காணவில்லை என ஓமந்தை காவல்துறை நிலையத்தில் இன்று (09) காலை முறைப்பாடு அளிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் அவர் அயல்வீட்டு கிணற்றில் சடலமாக இருக்கின்றமை அவதானிக்கப்பட்டது.
குறித்த சிறுவனின் புத்தகபை வீட்டிற்கு அண்மையில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ப.அபிசக் என்ற 7 வயது சிறுவனே காணாமல் போயிருந்தார். அவரது தாயார் வெளிநாடொன்றில் வசித்துவரும் நிலையில் தந்தையார் மற்றும் அப்பம்மாவுடன் வசித்து வந்துள்ளார். சம்பவ தினம் தந்தையார் வீட்டில் இருக்கவில்லை சம்பவம் தொடர்பாக ஓமந்தை காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்