பெருந்தோட்ட மக்களின் சம்பள உயர்வு கோரிக்கைக்கு மக்கள் விடுதலை முன்னணி ஆதரவு

download 13 2
download 13 2

பெருந்தோட்ட மக்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளுக்கும், தாம் முழுமையான ஆதரவை வழங்குவதாக, மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா தெரிவிக்கின்றார்.

மஸ்கெலிய பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே, அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

ஆயிரம் ரூபா வழங்கப்படவேண்டும் என சம்பள நிர்ணய சபையில் தீர்மானம் எடுக்கப்பட்டிருந்தாலும் அது தொடர்பான பிரச்சினை இன்னும் தீரவில்லை. ஆயிரம் ரூபா என்ற கோரிக்கை 6 வருடங்களுக்கு முன்னர் முன்வைக்கப்பட்ட கோரிக்கையாகும். அதனை வலியுறுத்தி தொழிலாளர்களுடன் இணைந்து நாமும் போராடினோம். 6 வருடங்களுக்கு முன்னர் இருந்த பொருளாதார நிலைக்கேற்பவே அந்த தொகை நிர்ணயிக்கப்பட்டது. தற்போது பொருட்கள், சேவைகளின் விலைகள் அதிகரித்துள்ளன. எனவே, கிடைக்கவுள்ள ஆயிரம் ரூபா போதாது என்பதையும் கூறியாக வேண்டும். சம்பள நிர்ணய சபையில் எமது அங்கத்தவர்கள் இருவர் அங்கம் வகிக்கின்றனர். சம்பள உயர்வுக்காக அவர்களும் குரல் கொடுத்தனர். சம்பள நிர்ணயசபை ஊடாக சம்பளம் தீர்மானிக்கப்பட்டுள்ளதால், கூட்டு ஒப்பந்தம் ஊடாக கிடைக்கப்பெறும் சலுகைகள் கிடைக்கப்பெறுமா என்ற கேள்வியும் எழுகின்றது. அவ்வாறு இல்லாது செய்யப்பட்டால் அவற்றை பெறுவதற்காக நாம் போராடுவோம். தொழிலாளர்களின் உரிமைக்காக நடைபெறும் அனைத்து போராட்டங்களுக்கும் நாம் முழு ஒத்துழைப்பையும் வழங்குவோம்.