மன்னார் மாவட்டத்தில் தொற்றாளர்களின் எண்ணிக்கை 260 ஆக அதிகரிப்பு

DSC 0505
DSC 0505

மன்னார் மாவட்டத்தில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை மேலும் 25 கொரோனா தொற்றாளர்கள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் மன்னார் மாவட்டத்தில் இது வரை 260 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் தெரிவித்தார்.

மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் இன்று புதன் கிழமை காலை இடம் பெற்ற ஊடக சந்திப்பின் போது அவர் அவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,,,

மன்னார் மாவட்டத்தில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை (24) மேலும் 25 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்களில் 24 நபர்கள் மாந்தை மேற்கு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிலும்,மேலும் ஒருவர் மடு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிலும் இவ்வாறு அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மாந்தை மேற்கில் அடையாளம் காணப்பட்ட 24 நபர்களில் கடந்த வாரம் தொற்றுடன் ஆடைத்தொழிற்சாலை ஒன்றில் அடையாளம் காணப்பட்டவரின் நெருங்கிய உறவினர்கள் மற்றும் வலைப்பாட்டு பகுதியில் தொற்றுடன் அடையாளம் காணப்பட்ட குடும்பத்துடன் நெருங்கி பழகியவர்கள்.

மேலும் சாவக்கச்சேரி பகுதியில் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டவரின் குடும்ப உறுப்பினர்கள் உள்ளடங்கியுள்ளனர். மடுவில் அரச அலுவலகம் ஒன்றில் கடமையாற்றுகின்ற உத்தியோகஸ்தர் ஒருவர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளார்.இவர்களுடன் சேர்த்து மன்னார் மாவட்டத்தில் இது வரை 260 பேர் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இந்த வருடம் ஜனவரி மற்றும் பெப்ரவரி ஆகிய இரு மாதங்களில் 243 பேர் இவ்வாறு அடையாளம் காணப்பட்டுள்ளனர்.இந்த மாதம் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டவர்களின் உடலில் உள்ள வைரசின் அளவு மிகவும் கூடுதலாக இருக்கக் கூடும் என எதிர் பார்க்கப்பட்டுள்ளது.

இதனால் இவர்களின் குடும்ப உறுப்பினர்கள் பலர் இலகுவாக தொற்றுக்கு உள்ளாகி உள்ளனர்.இந்த நிலமை பாரதூரமானது. எனவே மக்கள் சுகாதார நடைமுறைகளை உரிய முறையில் பின்பற்றிக் கொள்ள வேண்டும். மன்னார் மாவட்டத்தில் இது வரை 10 ஆயிரத்து 470 பீ.சி.ஆர். பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.இந்த மாதம் 1842 பீ.சி.ஆர்.பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.எதிர் வரும் மார்ச் மாதம் 2 ஆம் வாரம் அளவில் கொரோனா தாடுப்பூசிகள் வழங்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட உள்ளது.

இவ்விடையம் தொடர்பில் விழிர்ப்புணர்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதோடு தரவுகளை பெற்றுக்கொள்ளும் நடவடிக்கைகள் பூர்த்தியாகும் நிலையில் உள்ளது.

முதல் கட்டமாக 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும், 30 தொடக்கம் 60 வயதிற்கும் இடைப்பட்ட உழைக்கும் வர்க்கத்தினருக்கும் கொரோனா தாடுப்பூசி வழங்கப்படவுள்ளது.என அவர் மேலும் தெரிவித்தார்.