கிராமிய மற்றும் பாடசாலை விளையாட்டு உட்கட்டமைப்பு வசதிகள் மேம்பாட்டு இராஜாங்க அமைச்சினால் நாடளாவிய ரீதியில் நடைமுறைப்படுத்தப்படும் 332பிரதேச செயலர் பிரிவுகளின் கிராமங்களில் உள்ள கிராமிய விளையாட்டு மைதானங்களை அமைக்கும் தேசிய நிகழ்ச்சித்திட்டத்தின் ஆரம்ப அங்குரார்ப்பண நிகழ்வு இன்று(02) முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டிசுட்டான் பிரதேச செயலர் பிரிவின் கூழாமுறிப்பு கிராம சேவகர் பிரிவின் அண்ணா விளையாட்டுக்கழக மைதானத்தில் காலை 10.25மணிக்கு இடம்பெற்றது.
இந் நிகழ்வில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு இணைத்தலைவருமான காதர் மஸ்தான் அவர்கள் பிரதம அதிதியாக கலந்துகொண்டு 1.5 மில்லியன் நிதி ஒதுக்கீட்டின் கீழ் அமையப்பெறவுள்ள கரப்பந்தாட்ட மைதான வேலைத்திட்டத்தினை வைபவரீதியாக ஆரம்பித்து வைத்தார்.
இந் நிகழ்வில் மாவட்ட அரசாங்க அதிபர் க.விமலநாதன், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், திட்டமிடல் பணிப்பாளர், ஒட்டிசுட்டான் பிரதேச செயலாளர், உதவிப் பிரதேச செயலாளர், உதவி மாவட்ட செயலாளர், முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் து.ரவிகரன், புதுக்குடியிருப்பு பிரதேச சபை உறுப்பினர்கள், கூழாமுறிப்பு பங்குத்தந்தை வண.பத்திநாதன். விளையாட்டு திணைக்கள உத்தியோகத்தர்கள், கிராம சேவகர், அண்ணா விளையாட்டுக்கழக உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டனர்.