மட்டக்களப்பு மாவட்டத்தில் நீதி அமைச்சின் இழப்பீடுகளுக்குள்ளான அலுவலகத்தினால் 345 பேருக்கு 168 இலட்சம் ரூபா காசோலை நட்டஈட்டுக் கொடுப்பனவு இன்று (06) சனிக்கிழமை மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கே. கருணாகரன் தலைமையில் மண்முனை வடக்கு பிரதேச செயலக மண்டபத்தில் இடம்பெற்றது.
இந்த நிகழ்வில் பின்தங்கிய கிராம அபிவிருத்தி மனைசார் கால்நடை வளர்ப்பு மற்றும் சிறு பொருளாதார பயிர்ச் செய்கை மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு இணைத்தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சிவனேசதுரை சந்திரகாந்தன் ஆகியோர் பிரதம அதிதிகளாக கலந்துகொண்டு நட்ட ஈட்டுக் கொடுப்பனவு காசோலைகளை வழங்கிவைத்தனர்.
இதன்போது கடந்த காலங்களில் பாதிக்கப்பட்ட 36 ஆலயங்களிற்கும், கடன்பாதிப்பிற்குள்ளான 26 பேருக்கும், சொத்துப் பாதிப்பிற் குள்ளான 280 உட்பட 345 பேர்களுக்கு நட்ட ஈட்டுக் கொடுப்பனவுகளாக 168 இலட்சம் ரூபாய் காசோலைகளாக வழங்கிவைக்கப்பட்டது. இதில் அபிவிருத்திக்குழு தலைவரின் செயலாளர் திருமதி.மங்களேஸ்வரி சங்கர், மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் திருமதி. சசிகலா புண்ணியமூர்த்தி, பிரதேச செயலாளர்கள், உதவிப் பிரதேச செயலாளர்கள் மற்றும் ஏனைய திணைக்களகங்களின் உயர் அதிகாரிகளும் கலந்துகொண்டிருந்தனர்.