உயிர்த்த ஞாயிறு தாக்குதல் அறிக்கை கிடைக்கப் பெற்றதையடுத்து சட்டமா அதிபரால் 12 சட்டத்தரணிகள் அடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ரியர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.
மாத்தறை பகுதியில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது பேசிய அவர்,
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக 32 பேருக்கு எதிராகக் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்வது தொடர்பான அறிக்கைகள் சட்டமா அதிபருக்கு அனுப்பப்பட்டுள்ளது.
இந்நிலையில், மனிதக் கொலை, சதித்திட்டம் தீட்டியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் அவர்களுக்கு எதிராக குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படவுள்ளது.
ஒரே நாளில் நாட்டின் 8 இடங்களில் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. இது தொடர்பான 8 அறிக்கைகளும் சட்டமா அதிபருக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. அத்துடன் இந்த தாக்குதல் தொடர்பான பயிற்சி நடவடிக்கைகள் உள்ளிட்ட செயற்பாடுகளில் ஈடுபட்ட 241 பேர் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை கிடைக்கும் வரையில் சட்டமா அதிபர் காத்திருந்தார். தற்போது ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை கிடைக்கப்பெற்றுள்ளது. இதனையடுத்தே சட்டமா அதிபரால் 12 சட்டத்தரணிகள் அடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது என்றார்.