பாகிஸ்தானின் 81 ஆவது தேசிய நிகழ்வுகள் கொழும்பிலுள்ள பாகிஸ்தானிய உயர்ஸ்தானிகராலயத்தில் இன்று செவ்வாய்கிழமை உயர்ஸ்தானிகர் முஹம்மது சாத் கட்டாக் தலைமையில் நடைபெற்றது.
முற்போக்கு நோக்கமுடைய, ஜனநாயக மற்றும் நலன்புரி நாடாக பாகிஸ்தானை மாற்றல் என்ற தொனிப்பொருளில் பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயமும் இலங்கைவாழ் பாகிஸ்தான் சமூகமும் இணைந்து தேசியதினத்தைக் கொண்டாடினர்.
லாகூரில் 1940 ஆம் ஆண்டில் நிறைவேற்றப்பட்ட வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்மானத்தை நினைவுகூரும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம் 23 ஆவது திகதி பாகிஸ்தான் தேசியதினம் கொண்டாடப்படுகின்றது.
இந்த வரலாற்றுத் தீர்மானமானது துணைக்கண்டத்தின் முஸ்லிம்களுக்கு தனித்தாயகமொன்றை வேண்டிநின்றது. அதனூடாக 1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 14 ஆம் திகதி பாகிஸ்தான் என்ற தனிநாடு உருவானது.
இந்நிலையில் இன்றைய தினம் நடைபெற்ற தேசியதின நிகழ்வில் உயர்ஸ்தானிகர் முஹம்மது சாத் கட்டாக் தேசியகீதம் இசைக்கும் தருணத்தில் பாகிஸ்தான் தேசியக்கொடியை ஏற்றி நிகழ்வை ஆரம்பித்துவைத்தார்.
அதனைத்தொடர்ந்து பாகிஸ்தான் ஜனாதிபதி மற்றும் பிரதமரின் சிறப்புச்செய்திகள் வாசிக்கப்பட்டன.
இதன்போது இரு தலைவர்களும் பாகிஸ்தான் தேசியதினத்தின் முக்கியத்துவம் பற்றி குறிப்பிட்டதுடன் காயித்-இ-அஸாம் முகம்மது அலி ஜின்னா, டாக்டர் அல்லாமா முஹம்மது இக்பால் உள்ளிட்ட அனைத்துத் தலைவர்களுக்கும் நன்றியை வெளிப்படுத்தினர். அத்தோடு இந்நிகழ்வில் இலங்கைவாழ் பாகிஸ்தானியர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.