யாழ் மாவட்டத்தில் மார்ச் மாதத்தில் மாத்திரம் இதுவரை 536 பேருக்கு கொரோனா!

COVID 19 870 489 3
COVID 19 870 489 3

யாழ் மாவட்டத்தில் மார்ச் மாதத்தில் மாத்திரம் இதுவரை 536 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் உள்ள வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

யாழ் நகரப்பகுதியில் கொரோனா பரம்பல் அதிகரித்ததை அடுத்து வர்த்தக நிலையங்களையும் சந்தை தொகுதியையும் மூடியிருந்தோம். அதற்கு பின்னர் கடந்த ஞாயிறு மற்றும் திங்கள் குறித்த வர்த்தக நிலையம் மற்றும் சந்தை தொகுதியில் பணியாற்றுகின்றவர்களுக்கான பி.சி.ஆர் மாதிரிகளை எடுத்திருந்தோம். குறிப்பாக 1440 பேரிடம் பி.சி.ஆர் மாதிரிகள் எடுத்திருந்தோம் அவர்களில் இதுவரை 35 பேருக்கு மாத்திரமே தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

யாழ்ப்பாண மாநகர சந்தை தொகுதியால் 117 பேர் இதுவரை கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.அத்தோடு இரண்டு வாரங்கள் முடிவடைந்ததும் முடக்கப்பட்ட பகுதிகளில் மீண்டும் பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்படும். அத்தோடு யாழ்ப்பாண வலய பாடசாலைகள் மறு அறிவித்தல் வரை மூடப்பட்டிருக்கும்.

நாங்கள் அதிகமான நபர்களிடம் பி.சி.ஆர் மாதிரிகளை எடுத்ததற்கு காரணம் கொரோனாவின் பரம்பல் தீவரம் எவ்வாறு இருக்கின்றது என்பதை கண்டறிவதற்காகவே. இதன் மூலம் கிடைக்கப்பற்ற முடிவுகளின் பிரகாரம் இதனை கட்டுப்படுத்தப்படக்கூடிய சூழ்நிலை காணப்படுகின்றது. எனவே மக்கள் தேவையற்ற அச்சத்தை தவிர்த்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளுகின்றோம் என தெரிவித்தார்.