கொரோனா பாதிப்பு காரணமாக முன்பள்ளி மாணவர்களின் சுகாதாரத்தை மேம்படுத்த உலக வங்கியினால் வழங்கப்பட்ட கைகழுவும் உபகரணங்கள் வவுனியா பிரதேச செயலகத்தில் நீண்ட நாட்களாக தேங்கி காணப்படுகின்றது.
மகளிர் மற்றும் சிறுவர் மேம்பாட்டு இராஜாங்க அமைச்சின் ஊடாக உலக வங்கியினால் வழங்கப்பட்ட குறித்த பொருட்கள் முன்பள்ளிகளுக்கு பகிர்தளிக்கப்பட்டிருக்க வேண்டும்.
எனினும் வவுனியா பிரதேச செயலகத்தில் அவை பகிர்ந்தளிக்கப்படாமல் காணப்படுவதற்கு அரசியல்வாதிகள் காரணமாக உள்ளனரா? என சந்தேகம் எழுந்துள்ளது.
கிராமப்புறங்களில் உள்ள பல முன்பள்ளிகள் நிதி வசதியின்றி போதுமான சுகாதார மேம்பாட்டு செயற்பாடுகளை மேற்கொண்டு வரும் நிலையில் பிரதேச செயலகத்தில் ஒரு மாதத்திற்கும் மேலாக குறித்த பொருட்கள் தேங்கி கிடப்பது தொடர்பில் பலரும் கவலை தெரிவிக்கின்றனர்.
இது தொடர்பாக வவுனியா பிரதேச செயலாளரிடம் கேட்டபோது,
குறித்த அமைச்சினூடாக பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. எனினும் அமைச்சினூடாகவே வழங்கப்பட வேண்டும் என எமக்கு தெரிவிக்கப்பட்டமையால் பொருட்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. அவர்களினூடாக திகதி தந்ததன் பின்னர் வழங்கி வைக்கப்படும் என தெரிவித்தார்.