நாட்டில் இன்று காலை 6 மணியுடன் நிறைவடைந்த 48 மணித்தியாலங்களில் வாகன விபத்துக்களால் 30 பேர் மரணித்துள்ளனர்.
அத்துடன் குறித்த காலப்பகுதியில் வாகன விபத்துக்களால் சுமார் 150 பேர் வரையில் காயமடைந்துள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் பிரதி காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
கடந்த 24 மணித்தியாலங்களில் வாகன விபத்துக்களால் 16 பேர் உயிரிழந்தனர்.
அவற்றில் நேற்று இடம்பெற்ற வாகன விபத்துக்களில் 8 பேரும் இதற்கு முன்னர் இடம்பெற்ற விபத்துக்களில் காயமடைந்து வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வந்த 8 பேரும் அடங்கியுள்ளனர்.
உயிரிழந்த 16 பேரில் 12 பேர் உந்துருளி செலுத்துனர்கள் என அவர் குறிப்பிட்டார்.
எனவே இந்த காலப்பகுதியில் சாரதிகளும் வீதிகளை பயன்படுத்துவோரும் மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டும் என காவல்துறை ஊடகப் பேச்சாளர் அறிவுறுத்தியுள்ளார்.