உஸ்பெகிஸ்தானில் நடைபெற்றுவரும் ஆசிய பளுதூக்கல் வல்லவர் போட்டியின் ஆண்களுக்கான 73 கிலோ கிராம் எடைக்குட்பட்ட பிரிவில் பங்கேற்ற இலங்கையின் இந்திக்க திசாநாயக்க மூன்று வெண்கலப் பதக்கங்களை வென்றெடுத்தார்.
5 ஆவது நாளாக நடைபெற்றுவரும் இப்போட்டித் தொடரின் இன்று (20.04.2021) இலங்கை நேரப்படி பிற்பகல் 2.30 மணிக்கு ஆரம்பமான ஆண்களுக்கான 73 கிலோ கிராம் எடைக்குட்பட்ட பிரிவில் பங்கேற்ற இந்திக்க திசாநாயக்க, ஒட்டு மொத்தமாக 285 கிலோ கிராம் எடையை தூக்கி வெண்கலப் பதக்கத்தை வென்றதுடன், ஸ்னெட்ச் முறையில் 130 கிலோ கிராம் எடையையும், க்ளீன் அன்ட் ஜேர் முறையில் 155 கிலோ கிராம் எடையை தூக்கி இரண்டு வெண்கலப் பதக்கங்களை கைப்பற்றினார்.
இப்போட்டியில் 310 கிலோ கிராம் எடையயை தூக்கிய கஸக்ஸ்தானின் அக்மோல்தா சய்ரம்கெஸ் தங்கப் பதக்கத்தையும், 309 கிலோ கிராம் எடையை தூக்கிய இந்தியாவின் ஷியூலி அச்சின்டா வெள்ளிப் பதக்கத்தையும் வென்றெடுத்தனர்.
ஸ்னெட்ச் முறையின் தங்கப் பதக்கத்தை 139 கிலோ எடையை தூக்கி இந்திய வீரரும், க்ளீன் அன்ட் ஜேர்க் முறையின் தங்கப் பதக்கத்தை 180 கிலோ எடையை தூக்கிய கஸக்ஸ்தான் வீரர் சுவீகரித்தனர்.
2018 ஆம் ஆண்டு கோல்கோஸ்டில் நடைபெற்ற 21 ஆவது பொதுநல விளையாட்டு விழாவில் ஆண்களுக்கான 69 கிலோ கிராம் எடைக்குட்பட்ட பளுதூக்கும் போட்டியில் வெள்ளிப்பதக்கத்தை வென்றிருந்தமை விசேட அம்சமாகும்.