மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள பருப்புக்கடந்தான் பகுதியில் இன்று (15) காலை 4.30 மணி அளவில் காட்டு யானை தாக்கிய நிலையில் சிறு காயங்களுடன் இளைஞன் ஒருவன் அதிஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளான்.
மடுக்கரை கிராமத்தைச் சேர்ந்த 26 வயதுடைய இளைஞன் ஒருவனே காட்டு யானையின் தாக்குதலுக்கு உள்ளாகி உள்ளார்.
குறித்த இளைஞன் மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவில் உள்ள பெரிய மடு பகுதியில் உள்ள தனது தோட்டத்தை பார்வையிட்டு பின் மீண்டும் வீடு நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன்போது பருப்புக்கடந்தான் – கட்டுக்கரை குள வீதியூடாக மோட்டார் சைக்கிளில் பயணித்தக் கொண்டிருந்த போது அதிகாலை 4.30 மணியளவில் குறித்த வீதியில் மறைந்திருந்த காட்டு யானை குறித்த இளைஞன் மீது தாக்கியுள்ளது.
இதன்போது குறித்த இளைஞன் மோட்டார் சைக்கிளில் இருந்து பாய்ந்துள்ளார்.
இதனை அடுத்து யானை மோட்டார் சைக்கிளை சேதப்படுத்தியுள்ளது.
அயலவர்களின் உதவியுடன் குறித்த இளைஞன் மீட்கப்பட்டார். காயங்களுக்கு உள்ளான குறித்த இளைஞன் பள்ளமடு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்