யாழ் மாவட்டத்தில் சமுர்த்தி பெறும் குடும்பங்களுக்கே முதற்கட்டமாக 5000 ரூபா கொடுப்பனவு வழங்கப்படுவதாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க. மகேசன் தெரிவித்துள்ளார்.
யாழ் மாவட்ட செயலகத்தில் இன்றையதினம் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே க.மகேசன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்….
அரசினால் குடும்பங்களுக்கு இடர்கால நிதியாக வழங்கப்படும் 5000 ரூபா கொடுப்பனவு யாழ்ப்பாண மாவட்டத்தில் நேற்று காலையிலிருந்து வழங்கப்பட்டு வருகின்றது.
குறித்த நிதியானது முதற்கட்டமாக சமுர்த்தி பெறும் குடும்பங்களுக்கே யாழ் மாவட்ட ரீதியில் வழங்கப்படவுள்ளது.
அதிலும் சமுர்த்தி, முதியோர் கொடுப்பனவு பெறுவோர் மாற்றுத்திறனாளிகளுக்கான கொடுப்பனவு பெறுவோருக்கே முதற்கட்டமாக இந்த கொடுப்பனவு வழங்கப்படவுள்ளது.
ஏனைய பிரிவினருக்கு அடுத்த கட்டமாக இந்த கொடுப்பனவு வழங்கப்படவுள்ளது எனவே பொதுமக்கள் இந்த விடயம் தொடர்பில் குழப்பமடைய தேவையில்லை. யாழ் குடாநாட்டின் பல்வேறுபட்ட இடங்களில் மக்கள் மத்தியில் குழப்ப நிலை ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது எனினும் பொது மக்கள் அவ்வாறு குழப்பமடைய தேவையில்லை என தெரிவித்துள்ளார்.