தெலங்கானா மாநில ஆளுநராக தமிழிசை சௌந்தரராஜன் பதவியேற்றுக் கொண்டார். அம்மாநில உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ராகவேந்திரா சவுகான் முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்துகொண்டார்.
2014-ம் ஆண்டில் தமிழக பாஜக தலைவராக நியமிக்கப்பட்டார். வரும் டிசம்பர் மாதத்துடன் அவருடைய பதவிக்காலம் முடிவடைய இருந்தது. இந்நிலையில், அண்மையில் தெலங்கானா, கேரளா, இமாச்சலப் பிரதேசம், மகாராஷ்டிரா, ராஜஸ்தான் ஆகிய 5 மாநிலங்களுக்கும் புதிய ஆளுநர்களை நியமிக்க குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த் உத்தரவிட்டார். இந்நிலையில் தெலங்கானா மாநில ஆளுநராக தமிழிசை சௌந்தரராஜன் நியமிக்கப்பட்டார். அதன்படி அவர் இன்று பதவியேற்றுக் கொண்டார்.
இதன் மூலம் தெலங்கானா மாநிலத்தின் முதல் பெண் ஆளுநர் என்ற பெருமையையும் தமிழிசை சௌந்தரராஜன் பெற்றுள்ளார்.