முல்லைத்தீவு உப்புமாவெளி பகுதியில் சட்டவிரோத மணல் குவிப்பு சம்பவத்துடன் தொடர்புடைய அருட்தந்தை ஒருவரை முல்லைத்தீவு காவற்துறையினர் கைதுசெய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியுள்ள நிலையில் 5 இலட்சம் சரீர பிணையில் விடுதலை செய்யப்பட்ட சம்பவம் 15.07.21 அன்று இடம்பெற்றுள்ளது.
அனுமதியற்ற மணல் அகழ்வு குவிப்பு தொடர்பில் ஊடகங்களில் வெளிக்கொணரப்பட்டுள்ளதை தொடர்ந்து உப்புமாவெளி பகுதிக்கு கடந்த 15.06.2021 அன்று நேரில் சென்ற முல்லைத்தீவு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர்,முல்லைத்தீவு மாவட்ட செயலக திட்டமிடல் பணிப்பாளர், முல்லைத்தீவு மாவட்ட காணி உத்தியோகத்தர்கள், கரைதுறைப்பற்று பிரதேச செயலக காணி உத்தியோகத்தர்கள், குறித்த பகுதி கிராம அலுவலர், புவிச்சரிதவியல் சுரங்கங்கள் அளவைகள் பணியகம்,சுற்றுச்சூழல் திணைக்களம்,கரைதுறைப்பற்று பிரதேச சபை தவிசாளர், காவற்துறையினர்,விசேட அதிரடிப் படையினர் என அனைத்து திணைக்கள அதிகாரிகளும் குறித்த மணல் அகழ்வு நிலமைகளை பார்வையிட்டனர்
இதன்போது குறித்த பகுதியில் இடம்பெற்ற மணல் அகழ்வு செய்து குவிக்கப்பட்டுள்ள விடயம் எந்த அனுமதிகளுமின்றி. சட்டவிரோதமாக இடம்பெற்றுள்ளது என்பதை அனைவரும் உறுதிப்படுத்தியுள்ளனர்
கடந்த 10.06.21 அன்று குறித்த மணல் அகழ்வு தொடர்பில் யாழ் ஆயர் இல்லம் அறிக்கை ஒன்றினை வெளியிட்டிருந்தது
இந்நிலையில் முல்லைத்தீவு காவற்துறையினர் இது தொடர்பிலான விசாரணைகளை முன்னெடுத்தாலும் கடந்த ஒரு மாதகாலமாக எவரையும் கைது செய்யாத நிலையில் உப்புமா வெளிபகுதியில் ஆயர் இல்லத்திற்கு பொறுப்பான சுவாமி தோட்டத்துக்கு பொறுப்பாக இருந்த அருட்தந்தையினை நேற்று (15.07.21) கைது செய்து முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியுள்ளார்கள்.
இந்நிலையில் அருட்தந்தையை மன்று 5 இலட்சம் ரூபா சரீர பிணையில் விடுவித்துள்ளதுடன் இந்த வழங்கு தொடர்பில் வழக்கு விசாரணைகள் 20.07.2021 க்கு திகதியிடப்பட்டுள்ளது.