ரஜினிகாந்த் தனிகட்சி தொடங்குவது எப்போது? என்று விவாதங்கள் நடந்து வரும் நிலையில் அவர் சினிமாவில் தொடர்ந்து நடிப்பதிலேயே கவனமாக இருக்கிறார்.
2017-ம் ஆண்டு டிசம்பரில் ரசிகர்கள் மத்தியில் நான் அரசியலுக்கு வருவது உறுதி என்று பிரகடனம் செய்த பிறகு அவரது நடிப்பில் காலா, 2.0, பேட்ட ஆகிய 3 படங்கள் திரைக்கு வந்து விட்டன.
இப்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் ‘தர்பார்’ படத்தில் நடித்துக்கொண்டு இருக்கிறார். மேலும் ஓரிரு படங்களில் நடித்த பிறகே அரசியல் கட்சி தொடங்குவார் என்ற யூகங்கள் நிலவுகின்றன. தர்பார் படத்தில் ரஜினிகாந்த் போலீஸ் அதிகாரியாக வருகிறார். அதிரடி சண்டை படமாக தயாராகிறது.
இந்த படத்துக்கு பிறகு கார்த்தியின் சிறுத்தை, அஜித்குமாரை வைத்து வீரம், வேதாளம், விவேகம், விஸ்வாசம் ஆகிய படங்களை இயக்கிய சிவா இயக்கும் படத்தில் ரஜினிகாந்த் நடிக்க உள்ளதாக கூறப்பட்டது. ‘தர்பார்’ படப் பிடிப்புக்கு புறப்படுவதற்கு முன்னால் இருவரும் சந்தித்து பேசியதும் இதனை உறுதிப்படுத்துவதாக இருந்தது.
இந்த நிலையில் சூர்யா நடிக்கும் புதிய படத்தை இயக்க சிவா தற்போது ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளார். இதனால் ரஜினி படத்தை அவரால் இயக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது.
இதைத்தொடர்ந்து மீண்டும் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் படத்திலேயே ரஜினிகாந்த் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. முருகதாஸ் சொன்ன கதை பிடித்துபோய் ரஜினிகாந்த் சம்மதம் சொல்லி விட்டதாக கூறப்படுகிறது.