பட்டியலின மக்கள் குறித்து இழிவாக பேசிய விவகாரம்: மீரா மிதுனுக்கு நிபந்தனை ஜாமீன்!

samayam tamil 1 1
samayam tamil 1 1

பட்டியலின மக்கள் குறித்து இழிவாக பேசிய விவகாரத்தில் கைது செய்யப்பட மீரா மிதுன் மற்றும் அவரது நண்பர் அபிஷேக்கிற்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம்.

தமிழ் சினிமா நடிகர், நடிகைகள், இயக்குனர்கள் குறித்து அவதூறாக பேசி சர்ச்சைகளை கிளப்புபவர் மீரா மிதுன். இவர் அண்மையில் பட்டியலின சமூகத்தை சேர்ந்தவர்கள் மிக இழிவாக பேசிய விவகாரம் தொடர்பாக கைது செய்யப்பட்டார். இந்நிலையில் இந்த வழக்கில் மீரா மிதுனுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது நீதிமன்றம்.

மாடலான மீரா மிதுன் ஒரு சில படங்களில் நடித்திருந்தாலும் இவருக்கு மிகப்பெரிய ஊடக வெளிச்சத்தை ஏற்படுத்திக் கொடுத்தது என்னவோ விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி தான். இந்த நிகழ்ச்சிக்கு முன்பாகவே அழகிப் போட்டி என்ற பெயரில் பல்வேறு நபர்களிடம் பணம் வாங்கி மீரா மீதுன் ஏமாற்றியதாக தொழிலதிபரான ஜோ மைக்கல் என்பவர் குற்றம் சாட்டி இருந்தார். இது தொடர்பாக மீரா மீது காவல் நிலையத்தில் பல புகார்களும் உள்ளன.

இந்நிலையில் பட்டியலினத்தவர் குறித்து அவதூறாக பேசி மீரா மிதுன் வெளியிட்ட காணொளி பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக அவர் மீது விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் காவல்துறையில் புகார் அளித்தனர். இந்த புகாரின் அடிப்படையில் வன்கொடுமை தடுப்பு சட்டம், கலகத்தை தூண்டுதல் உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். இந்த விவகாரத்தில் கடந்த மாதம் 14 ம் தேதி கைது செய்யப்பட்டார் மீரா மிதுன்.

அதனை தொடர்ந்து ஜோ மைக்கல் கொடுத்த வழக்கு தொடர்பாக மீண்டும் ஒருமுறை கைது செய்யப்பட்ட மீரா மிதுனுக்கு இந்த வழக்கில் அவருக்கு நிபந்தனை ஜாமீன் கிடைத்தது. இந்நிலையில் கடந்த 2019 ஆம் ஆண்டு எழும்பூரில் உள்ள நட்சத்திர விடுதியின் மேலாளரை மிரட்டியதாக அளிக்கப்பட்ட புகாரில் மீரா மிதுன் மீது ஆபாசமாக பேசுதல், கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் எழும்பூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.

அந்த வழக்கிலும் மீரா மிதுனுக்கு ஜாமீன் கிடைத்தது. ஆனால் பட்டியலினத்தவர்கள் குறித்து அவதூறாகப் பேசிய வழக்கில் மட்டும் அவருக்கு ஜாமீன் வழங்கப்படாமல் இருந்தது. இந்நிலையில் இந்த வழக்கில் மீரா மிதுனுக்கும், அவரது ஆண் நண்பரான ஷாம் அபிஷேக்கிற்கும் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது.